போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிணை பெற்ற இருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!
இந்திய நாட்டவர் ஒருவருக்குப் பிணை கையெழுத்திடுவதற்காகப் பணம் பெற்று, நீதிமன்றத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த இருவருக்குக் கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
நீண்ட விசாரணையின் பின்னர் ஹுசைன் மொஹமத் மற்றும் ஹசித் மொஹமத் ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன. எதிரிகள் தரப்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகாத நிலையில், தமக்குக் கருணை காட்டுமாறு குற்றவாளிகள் கோரிக்கை விடுத்தனர்.
எனினும், இத்தகைய மோசடிகளுக்கு முன்னுதாரணமான தண்டனை வழங்க வேண்டும் என்ற காவல்துறையினரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிவான், இருவருக்கும் சிறைத்தண்டனை விதித்தார். குற்றவாளிகள் ஏற்கனவே அனுபவித்த ஆறு மாத விளக்கமறியல் காலம் அவர்களது தண்டனைக் காலத்திலிருந்து கழிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது.

