மதுபோதையில் அட்டகாசம்! கிளி/ வலய கல்வி பணிப்பாளர் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு 

மதுபோதையில் அட்டகாசம் செய்த கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முறைகேடுகளுக்கும் விசாரணை கேருகிறது இலங்கை ஆசிரியர் சங்கம்.

கி.கமலராஜனின் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள், பழிவாங்கல்கள் மற்றும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை இரு வார காலத்துக்குள் வடமாகாண கல்வியமைச்சு எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்கத்தவறின், இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜனின் நிர்வாக முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் இரத்மலானையிலுள்ள வடமாகாண அரச உத்தியோகத்தர்களின் தங்குமிடத்தில் குடிபோதையில் மிகக் கீழ்த்தரமாக செயற்பட்டிருந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றை பதிவுத்தபால் மூலம் அனுப்பியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவுத்துள்ளார்.

பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பாக இதுவரை பொருத்தமான நடவடிக்கைகளை வடமாகாண கல்வியமைச்சால் மேற்கொள்ளப்படாமை குறித்தும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த கடிதத்தில் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜனின் நிர்வாக முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் இரத்மலானையிலுள்ள வடமாகாண அரச உத்தியோகத்தர்களின் தங்குமிடத்தில் குடிபோதையில் மிகக் கீழ்த்தரமாக செயற்பட்டிருந்தமை போன்ற குற்;றச்சாட்டுக்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், குறித்த வலயக்கல்விப் பணிப்பாளர் தொடர்பாக இதுவரை பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை குறித்து, எமது அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கி.கமலராஜன் குறித்து 2020.06.30 ஆம் திகதிய கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரால் 9 குற்றச்சாட்டுக்கள், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டு- அப்போது வடமாகாண ஆளுநராகவிருந்த, தற்போதைய கௌரவ ஆளுநருக்கும் பிரதியிடப்பட்டிருந்தது. அதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதை அறிய முடிகின்றது.

அதன் பின்னர், கி.கமலராஜனின் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகள் குறித்து, கிளிநொச்சி கல்வி கலாசார மேம்பாட்டு இணையத்தால் 28 விடயங்கள் பட்டியலிடப்பட்டதாகக் குறிப்பிட்டு, குறித்த விசாரணை அறிக்கையை வடமாகாண ஆளுநர் செயலகத்தின் 2021.05.17 ஆம் திகதிய கடிதம் மூலம் அறிக்கை கோரப்பட்டிருந்த போதும், அந்த அறிக்கை வடமாகாண ஆளுநர் செயலகத்துக்குக் கிடைக்கப்பெறாமை காரணமாக , வடமாகாண ஆளுநரின் உதவிச் செயலாளரால் 2022.02.11 ஆம் திகதிய G/NPC/A7/ZDE.Matt/2022/02 இலக்க கடிதம் மூலம் குறித்த விசாரணையை நடத்தி ஒருவாரகாலத்துக்குள் அனுப்பிவைக்குமாறு வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆயினும் – கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. கி.கமலராஜனின் அதிகார துஸ்பிரயோகம், முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான பொருத்தமான செயற்பாடுகள் எவையும் நடைபெற்றிராத நிலையில், கிளிநொச்சி மாவட்ட கல்விச் சமூகத்தினரால், குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரின் அதிகார துஸ்பிரயோகங்கள், பிரதேசவாத செயற்பாடுகள், களவு, உத்தியோகத்தர்களை வசைபாடுதல், பழிவாங்கல் இடமாற்றங்கள், சுய ஒழுக்கம் அற்ற நிலை போன்ற தலைப்புக்களுடன் ஆதாரங்களைக் குறிப்பிட்டு, அவரது பழிவாங்கல்கள், முறைகேடுகள் தொடர்பாக 2022.09.22 ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் – பரீட்சைக்குப் பொறுப்பான கிளிநொச்சி தெற்கு வலய பிரதிக் கல்விப் பணிப்பாள ரிடமிருந்து பொறுப்புக்களை தன்னிச்சையாகப் பெற்று தனக்கு இசைவான நபர்களுடன் பரீட்சைகளை நடாத்தி வருகின்றார் என்னும் குற்றச்சாட்டும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இவ்விடயம் பொருத்தமற்ற நடவடிக்கையென பரீட்சைத் திணைக்கள ஆணையாளரால் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியிருந்த போதும் தன்னிச்சையாகவே பக்கச்சார்பாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார்.

கி.கமலராஜனின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் துணைபோகாத பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர்கள் பலர் பழிவாங்கல் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனர்.

இவரது பழிவாங்கல் செயற்பாடுகளுக்கு முன்னைய செயலாளர்களும் வலயக்கல்விப் பணிப்பாளரால் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள பதவி நிலை உத்தியோகத்தர்களையும் வெளியேற்றும் முயற்சியாக பலரின் மாதாந்த வேலைத்திட்டம், மற்றும் தரங்கணிப்பீடு போன்றவற்றையும் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தடுத்து வைத்துள்ளார்.

குறித்த கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு அப்போதிருந்த வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரோ, வடமாகாண ஆளுநரோ – அக்கறையுடனோ பொறுப்புடனோ செயற்பட்டிருக்கவில்லை என்பதையே எம்மால் அவதானிக்க முடிகின்றது.

அதுமட்டுமல்லாமல் – 2022.12.20 ஆம் திகதியளவில் ஆரம்பப் புலனாய்வு நடவடிக்கைக்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அக்குழுவும் பக்கச்சார்பாகவே செயற்பட்டுள்ளது என்பதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. வலயக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய ஊழியரொருவரின் வாக்குமூலத்தினை, குறித்த விசாரணைக்குழுவானது, குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வலயக் கல்விப் பணிப்பாளரிடம், தமது ஒப்பமிடாத பிரதியொன்றை வழங்கிச் சென்றதன் மூலம் விசாரணைக் குழுவின் நம்பிக்கைத் தன்மை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி தெற்கு வலயத்தில் வைத்து நடத்தப்பட்ட ஆரம்பப் புலனாய்வு விசாரணையின்போது – குறித்த ஊழியர் வழங்கிய வாக்குமூலத்தில் திணைக்களத்திற்குச் சொந்தமான PC 1085 இலக்க வாகனத்தில் ஆடு கொண்டுவரப்பட்டு 12 பங்குகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டமை தொடர்பாகவும், DAA 7846 இலக்க திணைக்கள வாகனத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தனது மனைவி பிள்ளைகளை ஏற்றியிறக்கிய விடயங்களும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.கமலராஜன், அரச சொத்துக்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாகவும், குறித்த சொத்துக்களை தனது முறைகேடான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியமை தொடர்பாகவும் மிகத் தெளிவான சாட்சியங்கள் வழங்கப்பட்ட நிலையிலும், வடமாகாண கல்வியமைச்சோ, வடமாகாண ஆளுநரோ எந்தவொரு பொருத்தமான நடவடிக்கைகளும் எடுத்திருக்கவில்லை என்பது கண்டிக்கத்தக்க விடயமாகும்.

வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன் – தனது மகளுக்கு வீட்டுக்கு வந்து கற்பிக்க மறுத்த கிளி/கனகாம்பிகைக்குளம் அ.த.க.பாடசாலை ஆசிரியரை பழிவாங்கும் முகமாக 30 கிலோ மீற்றருக்கு அப்பால் பழிவாங்கல் இடமாற்றம் வழங்கியிருந்தார்.

அதேபோன்று தனது மகள் மாகாண மட்ட போட்டிக்கு தெரிவுசெய்யப்படவில்லை என்பதற்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி ஆரம்பப் பாடசாலை அதிபரை இடமாற்ற முனைந்தார்.

இரு சம்பவங்களும் தடுக்கப்பட்டமையையும் நினைவூட்டுகின்றோம். ஆயினும் – குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகளுக்கு துணைபோகாத காரணத்துக்காக பலர் பழிவாங்கப்பட்டுள்ளமையையும் குறிப்பிட விரும்புகின்றோம்.

உதாரணமாக – கிளி/முக்கொம்பன் பாடசாலை வளாகத்திலிருந்த மரமொன்றினை, தனது தனிப்பட்ட தேவைக்காக, தறித்து எடுப்பதற்காக தனக்கு இசைவான புதிய அதிபரை நியமித்து, குறித்த மரத்தை தறித்திருந்தமையை குறித்த பாடசாலை சமூகத்தின் மூலமாக நம்பகமாக அறிய முடிகின்றது.

(குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவரின் பெற்றோரான சாட்சியாளர், தனது பிள்ளை பழிவாங்கப்படுவதைத் தடுக்கும் முகமாக, தனிப்பட்ட ரீதியில் தன்னிடம் வாக்குமூலம் பெறப்படும்போது சாட்சியங்களை வழங்க முன்வருவதற்கு தயாராகவுள்ளார்.)

குறித்த வலயக் கல்விப் பணிப்பாளரின் முறைகேடுகளுக்கு உரிய நேரங்களில் – உரிய நடவடிக்கைகள் வடமாகாண கல்வியமைச்சும், வடமாகாண ஆளுநரும் எடுத்திராததன் விளைவாக – வடமாகாண கல்விப் புலத்தையே அவமானத்துக்கு உட்படுத்தும் வகையில், குறித்த வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன், இரத்மலானையிலுள்ள வடமாகாண அரச உத்தியோகத்தர்களுக்கான தங்குமிட விடுதியில் குடிபோதையில் சென்று அரச சொத்துக்களைச் சேதப்படுத்தியும், தூசன வார்த்தைகள் பேசியும், வாந்தியெடுத்து தங்குமிடத்தையே சீரழித்திருந்தார். அங்கு தங்கியிருந்த ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தார்.

இவ்விடயம் குறித்து அங்கு தங்கியிருந்த மருத்துவர் உட்பட பொறியியலாளர், சுகாதார பரிசோதகரால் வடமாகாண பிரதம செயலாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும், கி.கமலராஜனுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது, வடமாகாண கல்விப்புலத்தை சீரழிக்கத் துணைபோகும் நடவடிக்கையாகவே கருதுகின்றோம்.

பல்வேறு அச்சுறுத்தல்களையும், சவால்களையும் எதிர்கொண்டுவரும் வடமாகாண கல்விச் சமூகத்தை, வழிநடத்த வேண்டிய கல்வி அதிகாரிகள் தரத்தில் உள்ள கி.கமலராஜனின் கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு உடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதுடன், சுதந்திரமான விசாரணை நடத்தப்படுவதற்குரிய நம்பிக்கையின் அறிகுறியாக கி.கமலராஜன் வடமாகாண கல்வித் திணைக்களத்திலோ அல்லது வடமாகாண கல்வியமைச்சிலோ உடனடியாக இணைக்கப்பட்டே விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றோம். இவ்வாறான இணைப்பின் மூலமே பாதிக்கப்பட்ட பலர் சுதந்திரமாக சாட்சியங்களை வழங்குவதற்குரிய சூழல் ஏற்படுத்தப்படும்.

கிளிநொச்சி தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கி.கமலராஜன் தொடர்பாக விரிவான விசாரணையை கோரும் அதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கம் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சாட்சியங்களை வழங்கவும் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கி.கமலராஜனின் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகங்கள், பழிவாங்கல்கள் மற்றும் கீழ்த்தரமான செயற்பாடுகளுக்குரிய பொருத்தமான நடவடிக்கைகளை இருவாரகாலத்துக்குள் வடமாகாண கல்வியமைச்சு எடுக்கத்தவறின், இலங்கை ஆசிரியர் சங்கம் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளும் என்பதையும் தயவுடன் அறியத்தருகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதம் வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: S.R.KARAN