கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை, நடனக் கல்லூரி விடுதியில் இன்று (19) பிற்பகல் 20 வயதுடைய மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
திருக்கோவில் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் RDA வீதியைச் சேர்ந்த குறித்த மாணவி, நாடகத்துறைக்கு தெரிவாகி சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது கற்கைநெறியை ஆரம்பித்திருந்ததுடன், முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விடுதி அறையில் மாணவி உயிரிழந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவத்தை நேரில் கண்ட இரு மாணவிகள் அதிர்ச்சியில் மயங்கி வீழ்ந்துள்ளனர்.
பின்னர் மாணவர்கள் அவர்களை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

