நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக்ஷன் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், ‘படையப்பா’ மற்றும் ‘வேட்டையாடு விளையாடு’ ஆகிய திரைப்படங்களின் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கன்னடத் திரையுலகம் மூலம் நடிகையாக அறிமுகமான கயாடு லோஹர், தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்தும் கயாடு லோஹரும் வானூர்தி பயணத்தின்போது எதிர்பாராத விதமாக அருகருகே அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படத்தை கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகை எனக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்பாராத விதமாக அவருக்கு அருகில் அமர்ந்து பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது தன்னால் நம்பவே முடியாத அனுபவமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஜினிகாந்தைப் பார்த்த அந்த நொடியில் தனது மனதில் ‘சுந்தரி’ பாடல் ஒலிக்கத் தொடங்கியதாகவும், அந்தத் தருணம் தன்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
என்றாவது ஒரு நாள் அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்றும் கயாடு லோஹர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தை எதிர்பாராத விதமாகச் சந்தித்த அனுபவத்தை கயாடு லோஹர் பகிர்ந்துள்ள பதிவு, தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

