Eurostar பயணியின் பெட்டியில் ஆபத்தான வெடிகுண்டு — Gare du Nord தொடருந்து நிலையத்தில் பரபரப்பு!!
நூற்றுக்கணக்கான மீற்றர் தொலைவிலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டு ஒன்று Eurostar பயணியின் பயணப் பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்டதால், Gare du Nord-இல் உள்ள Eurostar ஏறும் பகுதி தற்காலிகமாக வெளியேற்றப்பட்டது.
இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
New Zealand நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் Eurostar தொடருந்தில் பயணம் செய்வதற்காக Gare du Nord தொடருந்து நிலையம் வந்திருந்தார். அவரது பெட்டியை சுங்க அதிகாரிகள் எக்ஸ்-ரே மூலம் பரிசோதித்தபோது, அதற்குள் ஒரு வெடிகுண்டின் உறை மற்றும் முனைப்பகுதி இருப்பது கண்டறியப்பட்டது.
அவற்றை Belgium நாட்டில் உள்ள நினைவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வாங்கியதாகவும், அதற்கான பற்றுச்சீட்டு தன்னிடம் இருப்பதாகவும் பயணி தெரிவித்தார். ஆனால், இத்தகைய பொருட்களை பயணப் பெட்டியில் எடுத்துச் செல்வது சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை.
வரலாற்றில் ஆர்வம் கொண்டவர் அல்லது சேகரிப்பாளர் என்றாலும், போர்க்களத்தில் கண்டெடுத்த பொருள் என்பதாலும் வெடிகுண்டுகளை விமானம் அல்லது தொடருந்து பயணத்தில் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.
இவை போக்குவரத்து சட்டத்தினாலும் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தினாலும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. சம்பவத்தையடுத்து Eurostar ஏறும் பகுதி சிறிது நேரம் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டது.

