வாகன இலக்கத் தகடு அச்சிடல் ஒரு வருடத்தின் பின் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!
ஒரு வருடத்திற்கும் மேலாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்கத் தகடுகளை (Number Plates) அச்சிடும் பணிகள், இன்று (08) முதல் மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குனசேன தலைமையில் இன்று காலை இந்த பணிகள் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டன. வேரஹேர பகுதியில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மோட்டார் வாகன ஆய்வு மற்றும் பயிற்சி மைய அச்சிடும் பிரிவில் இதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் வாகன இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் எதிர்நோக்கி வந்த நீண்டகாலத் தாமதங்கள் முற்றாகத் தவிர்க்கப்பட்டு, விரைவான சேவை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

