காவல் துறைக்குத் தொடர்புகொண்டு கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர்: பாரிஸ் மொண்ட்பர்னாஸ் தொடருந்து நிலையத்தில் அதிரடிக் கைது!
பிரான்சின் லாவல் (Laval) நகரில் தனது முன்னாள் துணைவியைக் கொலை செய்துவிட்டு, பாரிஸ் நோக்கி தொடருந்தில் தப்பிச் சென்ற 32 வயது நபர், அவராகவே காவல் துறைக்குத் தொடர்புகொண்டு குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, பாரிஸ் மொண்ட்பர்னாஸ் (Montparnasse) தொடருந்து நிலையத்தில் இன்று (ஜூன் 4, வியாழக்கிழமை) மதியம் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
பாரிஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த அந்த நபர், அவசரக் காவல் உதவி எண்ணான 17-க்குத் தொடர்புகொண்டு, மயன் (Mayenne) மாகாணம் லாவல் நகரில் உள்ள தனது முன்னாள் துணைவியின் வீட்டில் வைத்து அவரைக் கொன்றுவிட்டதாகவும், தற்போது தான்மொன்ண்ட்பர்னாஸ் தொடருந்து நிலையத்திற்கு வரும் தொடருந்தில் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலின் அடிப்படையில் உஷார்படுத்தப்பட்ட பாரிஸ் தொடருந்து காவல் படையினர் (BRF) மற்றும் குற்றத் தடுப்புப் பிரிவினர் (BAC), அவர் மொண்ட்பர்னாஸ் தொடருந்து நிலையத்தில் வந்திறங்கியதும் உடனடியாக அவரைக் கைது செய்தனர்.
முன்னதாக, லாவல் நகரின் செயிண்ட்-நிக்கோலஸ் (Saint-Nicolas) பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 39 வயதான அந்தப் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த பெண்ணும் கைது செய்யப்பட்ட நபரும் கடந்த சில மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5, 9 மற்றும் 11 வயதுகளில் மூன்று குழந்தைகள் உள்ளனர் என லாவல் நகர அரசுத் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
சடலம் கண்டெடுக்கப்பட்ட உடனேயே, “துணைவரால் செய்யப்பட்ட கொலை” (meurtre par conjoint) என்ற பிரிவின் கீழ் லாவல் நகர வழக்குரைஞர் அலுவலகம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இந்த வழக்கு மயன் தேசியக் காவல் துறையின் மாகாண இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட முப்பத்து இரண்டு வயது நபர், பாரிஸின் 14-வது வட்டாரக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தீவிர விசாரணையில் வைக்கப்பட்டுள்ளார். ஓட்டுநர் உரிமமின்றிக் வாகனம் ஓட்டியது மற்றும் திருட்டு ஆகிய குற்றங்களுக்காக ஏற்கனவே இவர் தண்டிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், “இந்தத் தம்பதியினருக்கு இடையே குடும்ப வன்முறை தொடர்பான எந்தவொரு முன் புகாரும் காவல் துறையில் பதிவு செய்யப்படவில்லை” என வழக்குரைஞர் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் சரியாக எத்தகைய சூழ்நிலையில், எப்படிக் கொல்லப்பட்டார் என்பதைத் துல்லியமாக அறிய விரிவான தடயவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

