கோபத்தில் கேள்விகளை வீசிய விஜய்.. வேதனையை வெளிப்படுத்திய மாரி செல்வராஜ்.. விஷயம் ஒன்னுதான்!
தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் தரமான இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் இயக்குநர் மாரி செல்வராஜ்.
அடிப்படையில் எழுத்தாளரான அவரது படங்கள் சமூகத்தில் தொடர்ந்து சமத்துவம் குறித்த உரையாடலை நிகழ்த்திக் கொண்டே உள்ளது. இப்படி இருக்கையில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் நேற்று முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், இருவர் பரிதாபமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இப்படி இருக்கையில் இது தொடர்பாக மொத்த தமிழ்நாடு இது குறித்து பேசிக் கொண்டு இருக்கிறது.
ஏற்கனவே இந்த கொடூரச் செயலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கணடன அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பல கேள்விகளை கோபமாக எழுப்பி இருந்தார். அப்படி இருக்கையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சம்பவம் தொடர்பாக தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். ‘
வேதனையில் மாரி செல்வராஜ்: இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், ” நேற்று இரவு நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியிருக்கும் கொலைவெறி தாக்குதல் பெரும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென் மாவட்டங்களில் வன்முறையையும் சாதிய பெருமிதங்களையும் விஷமாக விதைத்து வளரும் அடுத்த தலைமுறையின் கனவுக்குள்ளும் நீங்கா சமூக பதற்றத்தை சமூக இடைவெளியை திட்டமிட்டு உருவாக்க முயலும் அத்தனை சமூக விரோதிகளையும் அடையாளம் கண்டு பெரும் உக்கிரத்தோடு அவர்களை அடக்கி ஒடுக்கி சிறைப்படுத்தி வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற தமிழகத்திற்கான நம்பிக்கையையும் உத்தரவாதத்தையும் உருவாக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை டேக் செய்துள்ளார். இயக்குநர் மாரி செல்வராஜின் இத்தகைய பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

