ஈரானில் கண்ட்ரோலை எடுக்கும் மௌஜ்தபா கமேனி.. புதிய சுப்ரீம் லீடராக மறைந்த கமேனி மகன் தேர்வு
ஈரான் நாட்டில் இப்போது போர் வெடித்துள்ள சூழலில், அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.
இந்த மோதலில் முதல் நாளிலேயே கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரானை வழிநடத்தப் போவது யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதற்கிடையே ஈரானின் சுப்ரீம் லீடராக மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மௌஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் இப்போது உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத விவகாரம் தொடர்பாக உடன்பாடு எட்டப்படாததால் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்த ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த சனிக்கிழமை இந்த தாக்குதல் தொடங்கிய நிலையில், 5வது நாளாக இன்றும் இந்த மோதல் இன்று தொடர்கிறது.
இந்த மோதலில் முதல் நாளே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். அவர் தனது இல்லத்தில் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்த சூழலில், இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதில் கமேனி உயிரிழந்தார். முதலில் கமேனி மரணத்தை ஈரான் மறுத்தாலும் கூட பிறகு அதை ஒப்புக்கொண்டது.
கமேனியின் இந்த எதிர்பாராத மரணம் ஈரானில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் கொந்தளித்த ஈரான் ராணுவம், இஸ்ரேலைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், மத்திய கிழக்கில் உள்ள பிற அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வரலாறு காணாத பதற்றம் நிலவுகிறது.
இதற்கு நடுவே ஈரானின் புதிய உச்ச தலைவர் யார் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. அந்த நாட்டில் உள்ள நிபுணர்களைச் சபையே புதிய உச்ச தலைவரைத் தேர்வு செய்யும். அதுவரை ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அலிர்சா அராஃபி கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்டார். இப்போது அந்நாட்டின் வல்லுநர் சபை புதிய சுப்ரீம் லீடரை தேர்வு செய்துள்ளது.
மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மௌஜ்தபா கமேனி ஈரான் நாட்டின் புதிய சுப்ரீம் லீடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரான் நாட்டின் ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
56 வயதான மௌஜ்தபா, ஈரானை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அலி காமேனியின் இரண்டாவது மகன் ஆவார். நீண்டகாலமாகவே கமேனியின் வாரிசாக இவர் கருதப்பட்ட வந்த சூழலில் அவரது நியமனம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அவரது தந்தை இறந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த நியமனம் நடந்துள்ளது.

