தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம்

தேனியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் ஐக்கியம்

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் அவரது ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இணைந்தனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார். காலம் முழுவதும் எம்ஜிஆர், ஜெயலலிதா யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அந்த கட்சியில் அவர் இணைந்ததற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக க.மயிலை ஒன்றிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்வு கடமலைக்குண்டுவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை வகிக்க, தெற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்எம்.ராமர் முன்னிலை வகித்தார்.

இதில் க.மயிலை தெற்கு ஒன்றியத்தில் உள்ள 18 கிளைச் செயலாளர்களும் ஓபிஎஸ் அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகி அதிமுகவில் இணைந்தனர். குமணன்தொழு, வனத்தாய்புரம், மண்ணூத்து, சென்றாயபுரம், தேவேந்திரபுரம், கோம்பைத்தொழு, முத்துலாபுரம், வலம்புரி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த கிளைச் செயலாளர்கள் விலகியதால் இப்பகுதியில் ஓபிஎஸ் கூடாரம் முற்றிலும் காலியாகி உள்ளது.

Recommended For You

About the Author: admin