மாத்தறை – தெவிநுவரவில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு
மாத்தறை, தெவிநுவர (Devundara) பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இன்று (பெப்ரவரி 21, 2026) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரில் வந்த இனந்தெரியாத ஆயுததாரி ஒருவர், சுப்பர் மார்க்கெட் அருகில் நின்று கொண்டிருந்த நபர் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 55 வயதுடைய நபர் பலத்த காயங்களுடன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர் யார்? மற்றும் இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கான பின்னணி என்ன? என்பது குறித்து கந்தர (Gandara) காவல்துறையினா் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைப் பயன்படுத்தி, கொலையாளி வந்த கார் மற்றும் நபரை அடையளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இது பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலா அல்லது தனிப்பட்ட பகையா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

