அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்துள்ளதாக – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
”அவர் அமெரிக்காவின் அதிபர், நான் இஸ்ரேலின் பிரதமர். இஸ்ரேலின் பாதுகாப்பு நலன்களுக்கு நான் பொறுப்பு, அதை விவேகத்துடன் செய்ய வேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று நடந்த ஊடக சந்திப்பொன்றில் அவர் பேசும் போது, இதனைக் கூறினார்.
”நாங்கள் ஈரானின் தலைவர்களைக் கொன்றோம், அதன் பாதுகாப்பு அமைப்புகளைக் கடுமையாகச் சேதப்படுத்தினோம், மேலும் ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலிலிருந்து இஸ்ரேலைக் காப்பாற்றினோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
”இஸ்ரேலும் அதன் மக்களும் அழிந்துபோகும் அபாயத்தைத் தடுத்து, அழிவிலிருந்து காப்பாற்றினோம். எங்கள் போராட்டம் இன்னும் முடிவடையவில்லை” எனவும் நெதன்யாகு கூறினார்.
ஈரான் அணு குண்டு தாயரிப்பதைத் தடுக்கும் வகையில், அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம் அமையும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில்; “ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது.
நான் இஸ்ரேலின் பிரதமராக இருக்கும் வரை, அது நடக்காது” என்று அவர் குறிப்பிட்டார்.
”லெபனானில் இருந்து கொண்டு – இஸ்ரேலை ஹிஸ்புல்லா அச்சுறுத்திக் கொண்டிருந்த முக்கிய பகுதிகளை நாங்கள் கைப்பற்றினோம். பயங்கரவாத அமைப்புகள் எங்கள் எல்லைகளில் தடம் பதிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.
ஈரானுடனான ஒப்பந்தம் ட்ரம்பால் செய்யப்பட்டது; அது அவருடைய முடிவு, ஆனால், எங்களுக்கு எங்கள் சொந்த நலன்கள் உள்ளன.
நாங்கள் லெபனானிலுள்ள இடைநிலை வலயத்தில் (buffer zone) தொடர்ந்து இருப்போம்” எனவும் நெதன்யாகு கூறியுள்ளார்.

