தந்தை – மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி
கர்நாடகாவில் பெய்த கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த நிலையில் அங்கு வசித்து வந்த தந்தை – மகன் ஆகியோர் காயம் எதுமின்றி நூலிழையில் தப்பித்தனர்.
இவர்கள் 2 பேரின் உயிரையும் அவர்கள் வளர்க்கும் பூனை தான் காப்பாற்றி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?. ஆம் இது உண்மை தான். கர்நாடகாவில் வளர்ப்பு பூனையால் தந்தை – மகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் நேற்று நடந்துள்ளது. அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
மனிதராக பிறந்த அனைவருக்கும் மரணம் நிச்சயம். மரணமில்லாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ஒருவரை மரணம் சீக்கிரம் நெருங்கலாம். இன்னொருவருக்கும் தாமதம் ஆகலாம். அவ்வளவு தான். இந்நிலையில் தான் கர்நாடகாவின் தந்தை – மகனின் உயிரை செல்லப்பிராணியான பூனை ஒன்று மரணத்தில் இருந்து காப்பாற்றி உள்ளது.
கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் பேச்சு வழக்கத்தில் ஒரு விஷயத்தை சொல்வார்கள். ”கடவுள் நேரில் வரமாட்டார். ஆனால் இக்கட்டான நேரத்தில் கடவுள் உதவிக்கு ஒருவரை அனுப்புவார். இதனால் கடவுளை நம்ப வேண்டும்” என்று சொல்வார்கள். அந்த வகையில் தான் கடவுளாக வந்து தந்தை – மகனை காப்பாற்றி உள்ளது இந்த பூனை. என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
கர்நாடகாவின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கலபுரகி, பெலகாவி, பாகல்கோட்டை உள்ளிட்ட வடகர்நாடகா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. பாகல்கோட்டை வல்லபபாய் நகரில் வசித்து ஷபீர் . இவரது மகன் பெயர் அர்பாஸ் . இவர்கள் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று மாலையில் வீட்டில் இருந்தனர். இவர்கள் வசிக்கும் வீடு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய வீடாகும். இந்த வீடு முழுக்க முழுக்க மண்ணால் கட்டப்பட்டதாகும். வீட்டின் மேற்கூரையும் மண், கட்டைகளை பயன்படுத்தி அமைக்கப்பட்டு இருந்தது.
இவர்கள் செல்லமாக பூனை ஒன்றை வளர்த்து வருகினறனர். நேற்று மாலையில் திடீரென்று கனமழை கொட்டியது. அப்போது அவர்களது வீட்டின் மேற்கூரை மழைநீரில் கரையதொடங்கியது. சுவர் வழியாக தண்ணீர் கசிந்தது. ஷபீர் மற்றும் அர்பாஸ் ஆகியோர் அதனை பார்க்கவில்லை. ஆனால் வீட்டில் இருந்த பூனை, ‘மியாவ்.. மியாவ்..” என்று வீட்டை விட்டு வெளியே ஓடியது. அதோடு வீட்டுக்கு வெளியே நின்று, ”மியாவ்.. மியாவ்…’ என சத்தம் எழுப்பியது.
இதனை கேட்ட ஷபீர், பூனை பசியால் துடிப்பதாக நினைத்து அதற்கு சாப்பாடு வைக்க வெளியே சென்றார். பின்னாலேயே மகன் அர்பாஸ் சென்றார். இந்த வேளையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. பூனை எழுப்பிய சத்தத்தால் வெளியே சென்ற ஷபீர், அர்பாஸ் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுபற்றி அர்பாஸ் கூறுகையில், ”நாங்கள் திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தோம். நேற்று நானும், எனது தந்தையும் மட்டும் வீட்டுக்கு வந்தோம். குடும்பத்தினர் வெளியூரில் உள்ளனர். நானும், தந்தையும் வீட்டுக்கு வந்தவுடன் எங்களின் பூனைக்கு சாப்பாடு வைத்தோம். 3 முறை சாப்பாடு வைத்தும் அது சாப்பிடவில்லை.
இதையடுத்து நேற்று மாலையில் மழை பெய்யும்போது வீட்டில் இருந்தோம். அப்போது பூனை கத்திக்கொண்டே வெளியே சென்றது. பூனை வயிற்று பசியால் தான் சத்தம் எழுப்புகிறது என்று நினைத்து தந்தை வெளியே சென்றார். பின்னாலேயே நானும் சென்ற சமயத்தில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. பூனையால் நாங்கள் தப்பித்து உள்ளோம். எங்களுக்கு புதிய வீடு கட்டி கொடுக்க அரசு உதவ வேண்டும்” என்றார்.

