லெபனான் மீது இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு!
லெபனான் நாட்டின் தெற்கு, கிழக்கு மற்றும் பெய்ரூட் பகுதிகளில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளதாக லெபனான் பொது சுகாதார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 123 பேர் கொல்லப்பட்டதுடன், 683 பேர் காயமடைந்துள்ளனர்.
தெற்கு லெபனானின் ஸ்ரீபா, ஐடா அல்-ஷாப், துலீன் மற்றும் மஜ்தல் செலம் உள்ளிட்ட நகரங்கள் நள்ளிரவில் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. கிழக்கு லெபனானின் தௌரிஸ் பகுதியிலும் அதிகாலையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
தலைநகர் பெய்ரூட்டின் மக்கள் நெரிசல்மிக்க தஹியே (Dahiyeh) பகுதியில் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. முன்னதாக இப்பகுதி மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து பெருமளவிலான மக்கள் வெளியேறி வருகின்றனர்.
ஹிஸ்புல்லாவின் எச்சரிக்கை: இஸ்ரேலிய எல்லைக்கு அருகாமையில் (5 கி.மீ தூரத்திற்குள்) வசிக்கும் இஸ்ரேலிய மக்கள் உடனடியாக வெளியேறுமாறு ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது லெபனானின் பெரிய நகரமான சிடோன் (Sidon) மீதும் தாக்குதல்கள் தொடர்வதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. அங்கு 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

