அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணத்தின் போதும்.. அடங்காத சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வெறி!
தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியை கண்டு ரசித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சனையும் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி தரமான வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ரன்களை குவித்தது. நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 89 ரன்களை குவித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 246 ரன்களை எடுத்து நூலிழையில் தோல்வி அடைந்தது. சிறப்பாக ஆடிய இளம் வீரர் ஜேக்கப் பெத்தல் 48 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். இந்திய அணியின் வெற்றிக்கு பும்ராவின் பவுலிங்கும், அக்சர் படேலின் ஃபீல்டிங்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதனால் இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில், ரன்கள், பார்ட்னர்ஷிப், ஸ்ட்ரைக் ரேட் உள்ளிட்டவற்றை நம்மால் அளவிட முடியும்.. ஆனால் வெற்றிபெற வேண்டும் என்ற பிடிவாதத்தை யாராலும் அளவிடவே முடியாது.
பேட்டிங்கின் போது பாசிட்டிவான அணுகுமுறையில் விளையாடியதையும், ஃபீல்டிங்கின் போது பதற்றமில்லாமல் இருந்ததையும் ரசித்தேன். நாக் அவுட் போட்டிகளில் இப்படியான மனநிலை மிகவும் அவசியமானது. சஞ்சு சாம்சன் தனது பேட்டிங் ஃபார்மை இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது சிறப்பானது. பேட்டிங்கில் தொடக்கத்திலேயே இந்திய அணியின் ஆட்டத்தை நிர்ணயித்துவிட்டார்.
இனி அனைவரின் கண்களும் இறுதிப் போட்டியில் தான் என்று பதிவிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கரின் இந்த டிவீட் ரசிகர்களிடையே டிரெண்டாகி வருகிறது. ஏனென்றால் நேற்று மாலை சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக்கின் வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின் இந்திய முன்னாள் வீரர்கள் நேராக வான்கடே மைதானம் வந்தனர்.
மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போதும் சச்சின் டெண்டுல்கர் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியை கண்டு ரசித்திருக்கிறார் என்பதே ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி வென்ற சில நிமிடங்களிலேயே சச்சின் டெண்டுல்கர் இந்த டிவீட்டை பதிவிட்டிருக்கிறார்.

