ஈரானால் வதம் செய்யப்பட்ட அமெரிக்காவின் பேட்ரியாட்

ஈரான் இப்படி அடிக்கும்னு.. டிரம்ப் நினைச்சிருக்க மாட்டார்! வதம் செய்யப்பட்ட அமெரிக்காவின் பேட்ரியாட்

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்காவின் பெருமைமிகு ‘பேட்ரியாட்’ (Patriot) ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் தடுமாறி வருவது உலக நாடுகளை உற்றுநோக்க வைத்திருக்கிறது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்க முயன்றபோது, அமெரிக்காவின் தற்காப்பு ஏவுகணைகள் நடுவழியில் செயலிழந்து விழுந்த காட்சிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

ஜோர்டானில் நிகழ்ந்த ‘மிஸ்ஃபயர்’!

ஜோர்டான் வான்பரப்பில் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் சீறிப்பாய்ந்து வந்தபோது, அவற்றை இடைமறித்து அழிக்க அமெரிக்காவின் ‘MIM-104 பேட்ரியாட்’ பேட்டரிகள் தயார் நிலையில் இருந்தன. ஆனால், ஏவப்பட்ட ஒரு ஏவுகணை இலக்கை நோக்கிச் செல்லாமல், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரைநோக்கிப் பாய்ந்தது. ராணுவத் தளத்திற்கு அருகிலேயே அது விழுந்து வெடித்ததில், அஸ்ராக் (Azro) நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றாலும், அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

 

Saturation Attack Strategy

ஈரான் இந்த மோதலில் ‘சேச்சுரேஷன் அட்டாக்’ (Saturation Attack) எனப்படும் தற்காப்பு அமைப்புகளைத் திணறடிக்கும் உத்தியை மிகத் துல்லியமாகப் பயன்படுத்துகிறது. ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள், குறைந்த உயரத்தில் பறந்து வரும் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் தற்கொலைப்படை ட்ரோன்களை (Kamikaze Drones) வெவ்வேறு திசைகளிலிருந்து ஏவுவதன் மூலம் அமெரிக்காவின் ரேடார் மற்றும் கணினி அமைப்புகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.

 

பேட்ரியாட் அமைப்புகள் ஒரு இலக்கைத் தாக்க ஒன்றுக்கும் மேற்பட்ட இடைமறிப்பு ஏவுகணைகளை ஏவ வேண்டியிருக்கும்; ஆனால், ஈரானின் ஏவுகணை மழை பொழியும் போது, பேட்ரியாட் அமைப்பின் வசம் உள்ள ஏவுகணைகளின் எண்ணிக்கை (Magazine capacity) வேகமாகக் குறைகிறது. இதனால் ஒரு கட்டத்தில் தற்காப்பு கவசம் செயலிழந்து, ஈரானின் ஏவுகணைகள் இலக்கை எளிதாகத் தாக்குகின்றன. மேலும், ஏவுகணைகள் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே இலக்கை அடையும் அதிவேகத் திறன் (Hypersonic speeds), பேட்ரியாட் அமைப்பின் எதிர்வினை ஆற்றும் நேரத்தைக் (Reaction time) குறைத்து, அதைச் சரியாகச் செயல்பட விடாமல் தடுமாறச் செய்கிறது.

 

கத்தார் முதல் சவுதி வரை… ஈரான் போட்ட ‘ஸ்குவாட்’ திட்டம்!

ஜோர்டான் மட்டுமல்லாமல், கத்தாரில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல்-உதித் (Al-Udeid) தளத்திலும் இதே நிலைதான். ஈரானின் ஏவுகணைகளைத் தடுக்கப் பாய்ந்த பல பேட்ரியாட் ஏவுகணைகள் இலக்கை எட்டத் தவறியதாகக் கூறப்படுகிறது.

 

ஈரான் இந்த முறை கையாண்ட உத்தி மிகவும் தெளிவானது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, எதிரி நாட்டுத் தற்காப்பு அமைப்புகளை நிலைகுலையச் செய்வதுதான் அந்தத் திட்டம். ஒரு ஏவுகணையை அழிக்க இரண்டு அல்லது மூன்று தடுப்பு ஏவுகணைகளை ஏவ வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கப் படைகள் உள்ளன. ஆனால், உக்ரைன் மற்றும் இஸ்ரேல் போர்களுக்குப் பிறகு அமெரிக்காவிடம் போதிய ஏவுகணை இருப்பு இருக்கிறதா? என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.

 

அரபு நாடுகளின் கண்டனம்!

பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா என அமெரிக்கப் படைகள் இருக்கும் அனைத்து நாடுகளையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் அலைகள் வீசின. தங்கள் நாட்டு எல்லைக்குள் நடத்தப்படும் இந்த அத்துமீறல்களை அரபு நாடுகள் கடுமையாகக் கண்டித்துள்ளன.

 

எவ்வளவுதான் நவீனமான மேற்கத்தியத் தொழில்நுட்பங்கள் இருந்தாலும், தொடர்ச்சியான மற்றும் அதிவேக ஏவுகணைத் தாக்குதல்களின் போது அவை திணறக்கூடும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கே இது ஒரு சவாலான சூழலாகத்தான் பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin