ஈரானால் அலறும் அரபு நாடுகள்! இது மட்டும் நடக்க கூடாது

சவுதி – அமீரகம் – கத்தாரில் இனி வாழ முடியாது.. ஈரானால் அலறும் அரபு நாடுகள்! இது மட்டும் நடக்க கூடாது

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ஈரான் நிலைக்குலைந்து போயுள்ளது.

 

சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஈரானால் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஈரான் தன்னை காப்பாற்றி கொள்ள எந்த எல்லைக்கும் செல்லலாம் என கூறப்படுவதால் தற்போது அரபு நாடுகள் அலற தொடங்கி உள்ளன. குறிப்பாக ஈரான் போரில் இந்த ஒரு விஷயம் நடந்தால் அங்கு மக்களே வாழ முடியாத நிலை ஏற்பட்டு வரும்.

 

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது போர் தொடுத்து வருகின்றன. நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வருகிறது. இன்று 6வது நாளாக போர் உக்கிரமடைந்துள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கில் அரபு நாடுகளாக உள்ள சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

 

இந்த நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ளன. அதோடு அமெரிக்காவின் விமானப்படை தளம், ராணுவ தளம், கடற்படை தளங்கள் இந்த நாடுகளில் உள்ளன. இதனால் தான் ஈரான், இந்த நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது. மேலும் ஈரான் தனக்கு சொந்தமான ஹார்முஸ் ஜலசந்தி எனும் கடல் வழிப்பாதையை மூடி உள்ளது. அந்த வழியாக செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்களை தாக்கி வருகிறது. இதன் வழியாக தான் கச்சா எண்ணெய், எல்என்ஜி கியாஸ் உள்ளிட்டவை பிற நாடுகளுக்கு செல்ல வேண்டும். தற்போது அதனை ஈரான் தடுத்துள்ளது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன.

 

இது ஒருபுறம் இருக்க தற்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மத்திய கிழக்கில் போர் உக்கிரமாகும்போது கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்று உலகமே அஞ்சுகிறது. ஆனால் அதைவிட பெரிய ஆபத்து அந்த நாடு மக்களின் குடிநீர் ஆதாரங்களுக்கு ஏற்படும் சான்ஸ் அதிகரித்துள்ளது. அதாவது போரில் அரபு நாடுகள் இந்த வர்த்தகம் தடைப்படுவதை விட ஈரானின் அடுத்தக்கட்ட தாக்குதலை தான் கண்டு அஞ்சுகின்றன. ஏனென்றால் இந்த நாடுகள் செல்வவளமிக்க பணக்கார நாடுகளாக உள்ளன. ஆனால் இந்த நாடுகளில் ஆறுகள் கிடையாது. பாலைவனங்களும், கடலும் தான் சுற்றி சுற்றி உள்ளன. இதனால் இந்த நாடுகள் தங்களின் குடிநீருக்காக கடல்நீரை தான் உப்பு நீக்கி பயன்படுத்தி வருகின்றன.

 

இன்னும் சொல்லப்போனால் மத்திய கிழக்கு நாட்டு மக்கள் தங்களின் குடிநீர் தேவையில் 90 சதவீதம் வரை கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ்தான் பெற்று வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு நாடுகளும் கடல்நீரை குடிநீராக்கும் (desalination plants) கட்டமைப்புகளை அமைத்து அதில் இருந்து குடிநீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றன. சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் மக்கள் கடல்நீரை குடிநீராக்கி தான் பயன்படுத்தி வருகின்றனர்.

 

இந்த நாடுகள் தற்போது ஈரானால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதில் குவைத், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்றவை தங்கள் குடிநீர் தேவைக்கு முழுமையாக கடல்நீரை குடிநீராக்கும் அமைப்புகளை சார்ந்து தான் உள்ளன. இதில் துபாய் நகரமும் அடங்கும். சவுதி அரேபியாவை எடுத்து கொண்டால் தலைநகர் ரியாத் கடல்நீரை குடிநீராக்கும் அமைப்பை சார்ந்து இயங்கி வருகிறது. டேட்டாப்படி பார்த்தால் சவுதி அரேபியா மக்கள்தொகையில் 70 சதவீதம் பேரும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் நாடுகளில் தலா 90 சதவீத மக்களும், ஓமனில் 86 சதவீத மக்களும், கத்தாரில் 99 சதவீத மக்களும் கடல்நீரில் உப்பை நீக்கி தான் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.

 

தற்போது நடக்கும் போரில் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை இன்னும் கடினமாக தாக்க முடிவு செய்துள்ளன. இது நடக்கும் பட்சத்தில் ஈரானால் இந்த குடிநீர் வழங்கும் நிலையங்களை நோக்கி தாக்குதல் நடத்தலாம். ஏனென்றால் ஈரான் படை பலத்திலும், பண பலத்திலும் அமெரிக்கா, இஸ்ரேலுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது. இருநாடுகளுடன் ஈரானால் ஈடு கொடுக்க முடியாது. இதனால் ஈரானால் இந்த போரில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. வெற்றிக்கான சான்ஸ் கொஞ்சம் கூட இல்லை.

 

எனவே முடிந்த வரை போர் செய்து எதிரிகளுக்கு பொருளாதார ரீதியாக இழப்பை ஏற்படுத்துவதும், கடைசியாக மின்நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களை தாக்குவதும் தான் ஈரானின் இலக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் இந்த நாடுகளில் குடிநீர் இன்றி மக்கள் தவிக்கும் நிலை உருவாகும். அதோடு போர்க்காலம் என்பதால் உடனடியாக பிற நாடுகளும் உதவிக்கு செல்ல முடியாது.

 

இதனால் தனது நட்பு நாடான அரபு நாடுகளின் நலன் கருதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போரை நிறுத்த வாய்ப்புள்ளது. இதனால் போரை நிறுத்த ஈரான் தனது கடைசி ஆயுதமாக அரபு நாடுகளில் உள்ள இந்த கடல்நீரை குடிநீராக்கும் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கலாம் என்று வார்னிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடல்நீரை குடிநீராக்கும் இந்த கட்டமைப்புகள் சர்வதேச சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் இதனை தாக்கினால் உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பு கிளம்பும்.

 

ஏனென்றால் பொதுவாக போரின் போது அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் பாதிக்க கூடாது என்பது விதியாக இருந்தாலும் கூட ஈரான் தங்கள் நாட்டை பாதுகாக்க எந்த எல்லைக்குள் செல்லலாம் என்பதால் இது சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளை அலறவிட்டுள்ளது.மேலும் இதற்கான வார்னிங்கை இப்போதே ஈரான் கொடுத்துள்ளது. அதன்படி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஃபுஜைராவில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலைக்கு மின்சாரம் வழங்கும் மின்நிலையத்தை ஈரான் தாக்கி உள்ளது. அதேபோல் குவைத்தில் ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல் வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ட்ரோனில் சிதைந்த பகுதிகள் விழுந்து ஒரு ஆலை சேதமடைந்துள்ளது.

 

மேலும் போர் சமயத்தில் இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த 1991ல் சதாம் ஹுசைனின் ஈராக் படைகள் குவைத்தின் முக்கிய எண்ணெய் குழாய் ஒன்றின் வால்வுகளை வேண்டுமென்றே திறந்து கச்சா எண்ணெயை பாரசீக வளைகுடாவில் கலந்தன. அமெரிக்காவின் தாக்குதல்களை தடுக்கவும், சவுதி அரேபியாவின் நீர் சுத்திகரிப்பு ஆலைகளை சேதப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இதனை ஈராக் படைகள் செய்தன. இதனால் ஈரானும் அந்த பாணியை கையில் எடுக்கலாம்.

 

மேலும் ஈரான் நீர் சுத்திகரிப்பு ஆலைகளை வேண்டுமென்றே குறிவைக்காமல் இருந்தாலும் கூட நீண்டகால போரால் வழிதவறிய ஏவுகணைகள், ட்ரோன்கள் கூட இந்த ஆலைகளை தாக்க வாய்ப்புள்ளது. இதனால் தான் அரபு நாடுகள் ஈரானால் அச்சமடைந்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin