இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் – பதற்றம்
ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் போரை தொடங்கி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் தான் இந்த போர் இந்தியாவை நெருங்கி உள்ளது. இந்திய பெருங்கடலில் வலம் வந்த அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இந்திய பெருங்கடலில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் புரிந்து வருகின்றது. இந்த போர் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. குறிப்பாக ஈரானை சுற்றிய கடல் பகுதிகளில் ஈரானின் போர்க்கப்பல்களை அமெரிக்கா மூழ்கடிக்கிறது.
தற்போது வரை 17 ஈரானின் போர்க்கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை இன்னும் ஈரான் உறுதி செய்யவில்லை.
இதற்கிடையே தான் ஈரானும், அமெரிக்காவின் போர்க்கப்பலை குறிவைத்து தாக்கி வருகிறது. அந்த வகையில் நம் நாட்டின் அருகே உள்ள இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் போர்க்கப்பலை தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஈரானின் அரசு சேனலில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், ”ஈரானின் கடல் எல்லையில் இருந்து 650 கிலோமீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் கடற்படை போர்க்கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்லாமிக் புரட்சிகர காவல்படையின் (Islamic Revolutionary Guards Corps or IRGC) ஏவுகணை தாக்கி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பாக ஈரானின் இஸ்லாமிக் புரட்சிக்கர காவல்படை அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இதுபற்றி ”Ghadr -380 மீடியம் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் Talaieh Strategic Cruise வகை ஏவுகணைகளை கொண்டு இந்திய பெருங்கடலில் உள்ள அமெரிக்காவின் போர்க்கப்பலை தாக்கி உள்ளது.
ஈரானின் கடல் எல்லையில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் போர்க்கப்பல் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் ஈரானின் வார்னிங்கை மதிக்காமல் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 10க்கும் அதிகமான கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுபற்றி அமெரிக்கா கடற்படை சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. முன்னதாக ஈரான் சார்பில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அதனை அமெரிக்கா முற்றிலுமாக மறுத்தது.
இருப்பினும் கூட தொடர்ந்து ஈரான் மீதான போர் வலுவடைந்து வருகிறது. இஸ்ரேலும், அமெரிக்காவும் இன்று 5வது நாளாக போரை தீவிரப்படுத்தி உள்ளன. அதேபோல் ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் , இஸ்ரேல் – அமெரிக்கா இடையே நடக்கும் போர் ஏற்கனவே வளைகுடா நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளன. சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளை ஈரான் தாக்கி வருகிறது.
இப்படியான சூழலில் தற்போது ஈரான் போர் இந்திய பெருங்கடல் வரை வந்துள்ளது. ஏற்கனவே இந்திய பெருங்கடல் பகுதியில் ஈரானின் போர்க்கப்பலான ஐரிஸ் டெனா இன்று மூழ்கியது. இதில் தவித்த 30 மாலுமிகளை இலங்கை கடற்படை காப்பாற்றியது. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் இந்த போர்க்கப்பல் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையே தான் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தனது ஏவுகணையால் இந்திய பெருங்கடலில் அமெரிக்காவின் போர்க்கப்பலை தாக்கியதாக தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் என்பது கடல் வழியில் நம் நாட்டின் நுழைவுப்பாதையாக உள்ளது.
இதனால் இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் நம் நாட்டை நெருங்கி உள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். மேலும் இத்தகைய நிலை நீடிக்கும் பட்சத்தில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல், ஓமன் வளைகுடா, பெர்ஷியன் கடல், செங்கடல் என்று முக்கிய கடல் பகுதிகளில் மோதலை தூண்டலாம். இதனால் பல நாடுகளுக்கான கடல் வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

