பொலிஸாரின் கட்டளைகளுக்கு பணியுமளவிற்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா?

பொலிஸார், நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட மோசமான இனப்படுகொலையின் நினைவாக ஆண்டுதோறும் மே மாதம் 18 ஆம் திகதி உறவுகளை நினைவேந்தி நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில், இம்முறை இலங்கை பொலிஸார் நீதிமன்றங்களை நாடி குறித்த நினைவேந்தலுக்கு தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.

ஆகவே வடக்கு மற்றும் கிழக்கில் நீதிமன்றங்கள் இனவாத பொலிஸாரின் கட்டளைகளுக்குப் பணிந்து செயற்படுகின்றனவா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் பொதுமக்களை ஒன்று கூட்டுவதும் அவர்களுக்கு கஞ்சி பரிமாறுவதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் எனக்கூறி பொலிஸார் கோரிய தடை உத்தரவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது .

இதன் காரணமாக திருகோணமலையில் கட்டைப்பறிச்சான் பகுதியில் புவன கணபதி ஆலயத்தில் கஞ்சி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்ற போது அந்த நிகழ்வில் ஈடுபட்டமைக்காக எமது கட்சியின் திருகோணமலை மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹர குமார் மற்றும் 3 பெண்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆலயத்தில் கஞ்சி காய்ச்சப்பட்டமைக்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. இதுதான் இந்த நாட்டின் நல்லிணக்கம், பிற இனங்கள், மதங்களை மதிக்கும் பண்பா? கைது செய்யப்பட்ட 4 பேரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

இலங்கை அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 15 ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனால் இன்றுவரை படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கருணா, பிள்ளையான், ஈ.பி.டி.பி. யினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அவர்களின் உறவுகள் இன்றும் அலைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு தமிழின தேசத்தின் மீதான இலங்கை அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எல்லை கடந்து செல்கின்றன. 2009 ஆம் ஆண்டில் உணவை ஆயுதமாகக் கொண்டு கோட்டாபய ராஜபக்ஷவும் மஹிந்த ராஜபக்ஷவும் தமிழ் மக்களை பட்டினி சாவுக்குள் தள்ளிய போதும் தமிழ் மக்கள் கஞ்சி குடித்து உயிர் பிழைத்த வரலாறு உள்ளது.

இதனை நினைவு கூரும் விதமாகவே மக்களுக்கு கஞ்சி கொடுக்கும் நிகழ்வை நினைவேந்தல் வாரத்தில் நாம் அனுஷ்டிப்பது வழமை. இந்த உணர்வு பூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகளையே பொலிஸார் நீதிமன்றங்களின் அனுமதியுடன் தடுத்து நிறுத்துகின்றனர்.

அப்படியெனில் எதிர்வரும் வெசாக் தன்சல் செயற்பாடுகளையும் சுகாதார சீர்கேட்டை காரணம் காட்டி தடுத்து நிறுத்துமாறு பொலிஸார் நீதிமன்றங்களை கோருவார்களா? அதனை ஏற்று நீதிமன்றங்கள் தடையுத்தரவு வழங்குமா? அவ்வாறான உணவு வழங்கலை தடுத்து நிறுத்த உங்களால் முடியுமா? தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா? இந்த இனவாத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துங்கள்” எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin