வெறும் 3 நாட்கள் Facebook நட்பு… 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்த தமிழ்ப் பெண்!
மட்டக்களப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், முகநூல் மூலம் அறிமுகமான ‘லண்டன் மருத்துவர்’ எனத் தன்னை அறிமுகப்படுத்திய நபரை நம்பிய பெண் ஒருவர்,
மொத்தமாக 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
தகவல்களின்படி, ‘டான்’ என்ற பெயரில் லண்டனில் இருந்து மருத்துவர் எனக் கூறிய நபர், முகநூல் வழியாக நட்பை ஏற்படுத்தியுள்ளார்.
சில நாட்களிலேயே, தன்னால் விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்தப் பார்சலை சுங்கத்திலிருந்து விடுவிக்க பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதை நம்பிய பெண் முதலில் 87 ஆயிரம் ரூபாயை அனுப்பியுள்ளார். பின்னர், மேலும் பணம் தேவைப்படுவதாகக் கூறி தொடர்ச்சியாக தொகைகள் பெறப்பட்டுள்ளன.
இறுதியில், பெண்ணும் அவரது தாயாரும் சேர்த்து 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளனர்.
அதன்பிறகும் மேலும் பணம் கேட்டபோது சந்தேகமடைந்த பெண், பணம் வழங்க மறுத்துள்ளார்.
பின்னர் அந்த நபர்களை தொடர்புகொள்ள முயன்றபோது, அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, தான் மோசடிக்கு ஆளானதை உணர்ந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அறிமுகமில்லாத சமூக வலைத்தள நண்பர்கள், வெளிநாட்டிலிருந்து பரிசுப் பொருட்கள் அனுப்புவதாகக் கூறுபவர்கள், சுங்கக் கட்டணம் அல்லது கிளியரன்ஸ் கட்டணம் கேட்பவர்கள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து உங்கள் கருத்தை கமெண்டில் பகிருங்கள்.

