மன்னாரில் தமிழர் காணிகள் இந்திய நிறுவனத்திற்கு விற்பனை

மன்னாரில் தனியாருக்கு சொந்தமான காணிகள் இந்திய நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பனை மரங்களை கொண்ட 160 ஏக்கர் காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமது பூர்வீக காணிகளே அத்துமீறி பிடிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். தமது வாழ்வாதாரத்திற்கான பனை மரங்களும் வெட்டப்பட்டுவதாகவும், தெரிவித்துள்ளனர்.

மக்களின் காணிகளை அபகரித்து, தற்போது சுற்று வேலி அமைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும், குறித்த காணியின் உரிமையாளர்கள் அங்கு சென்று தடுக்க முயற்சித்த நிலையில், அவர்களை பொலிஸார் கைது செய்வோம் என அச்சுறுத்துவதாகவும், அடாவடித்தனத்துடன் காணி அபகரிப்பு இடம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் வாழும் மக்கள் பனை உற்பத்தியை நம்பி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பனை மரங்கள் உள்ள காணிகள் அபகரிக்கப்பட்டு பனை மரங்களும் வெட்டப்பட்டு வருகிறன. இதனால் தாம் பாரிய அளவில் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்திய தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மணல் அகழ்வுக்காக குறித்த காணியை விற்பனை செய்துள்ள நிலையில் தங்களை உள்ளே நுழைய விடாது காணிக்கு சுற்று வேலி அடைக்கப்பட்டு வருகின்றது.

எனவே உரிய உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு தமக்கு வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த காணியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணி அபகரிப்பால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin