கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி

வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் எட்டு மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் ராஜ் சோமதேவ மூலம் நீதிமன்றில் கையளிக்கப்பட்ட குறித்த இடைக்கால அறிக்கை மொத்தமாக 35 பக்கங்களைக் கொண்டமைந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்ட சம்பவம் 1994ஆம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெறவில்லை என்பதோடு 1996 ஆண்டுக்கு பின்னர் இடம்பெறவில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, மீட்கப்பட்ட சடலங்கள் 1994ஆம் மற்றும் 1996ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் திகதி மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டது.

புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2023 நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு நிறுத்தப்பட்ட போது புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கங்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அவை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுடையது என தொல்லியல் துறை மூலம் நீதிமன்றில் வழங்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin