பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

இம்ரான் கான் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு அடுத்த ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 2018 ஆம் ஆண்டு கடைசியாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது 342 பாராளுமன்ற தொகுதிகள் இருந்தன.

தொகுதி மறுவரையின்கீழ் 6 தொகுதிகள் குறைக்கப்பட்டு தற்போது 336 தொகுதிகள் உள்ளன.

இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் டிசம்பர் 20 முதல் 23 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் கடந்த 17 ஆம் தேதி அறிவித்தது.

ஆனால் பல்வேறு கட்சிகளின் கோரிக்கைப்படி வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் மேலும் 2 நாள் நீட்டிக்கப்பட்டது.

இதன்படி வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. வேட்புமனுக்கள் இன்று முதல் டிசம்பர் 30 ஆம் திகதி வரை ஆய்வு செய்யப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி வேட்பாளர் இறுதிப்பட்டியல் வௌியாகும்.

ஜனவரி 12 வரை வேட்பாளர்கள் தங்கள் மனுவை திரும்ப பெறலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் 3 தொகுதிகளில் போட்டியிடுவார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இம்ரான் கானின் பூர்வீக நகரமான மியான்வலி மற்றும் லாகூரில் உள்ள 2 தொகுதிகளில் அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால் தோஷகானா ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள இம்ரான் கானின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Recommended For You

About the Author: admin