விண்வெளியில் தீவிரமடையும் வல்லரசுப் போட்டி: கடலில் இருந்து 9 செய்மதிகளை ஏவி சீனா புதிய சாதனை!
விண்வெளி சுற்றுப்பாதையில் தான் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்ட அடுத்த சில மணிநேரங்களில்,
கடலில் இருந்து 9 செய்மதிகளை வெற்றிகரமாக ஏவி சீனா புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
சீனாவின் ஷாங்காய் கடல் பகுதியிலிருந்து ‘கிராவிட்டி-1’ (Gravity-1) என்ற ரொக்கெட் மூலம் இந்த 9 செய்மதிகளும் விண்ணில் செலுத்தப்பட்டன.
இதில் ‘கியான்பான்’ (Qianfan) திட்டத்திற்கான 8 தொலைத்தொடர்பு பிராட்பேண்ட் செய்மதிகளும், 800 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட்ட ஒரு ‘தொழில்நுட்ப சோதனை’ (EUHT test) செய்மதியும் அடங்கும்.
கடலில் இருந்து ஏவப்பட்ட உலகின் முதல் பிராட்பேண்ட் மெகா-கான்ஸ்டலேஷன் ஏவுதல் நடவடிக்கை இதுவென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் அறிவிப்பும் சீனாவின் கடுமையான எச்சரிக்கையும்:
அமெரிக்க வான்படை மற்றும் விண்வெளிப் படை (US Space Force) தனது சுற்றுப்பாதைக் கட்டுப்பாட்டு ஆயுதங்களை (On-orbit space control weapons) விண்வெளியில் நிலைநிறுத்தியுள்ளதை வரலாற்றில் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது.
இதற்கு சீனா உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், “விண்வெளியில் போருக்குத் தயாராவதை வாஷிங்டன் உடனடியாக நிறுத்த வேண்டும்” எனவும் எச்சரித்தது.
இந்த ஏவுதல் நடவடிக்கைக்கு சுமார் இரு வாரங்களுக்கு முன்னர், சீனாவின் இரகசிய ‘யாவோகன்’ (Yaogan) இராணுவ உளவுத் திட்டத்துடன் தொடர்புடைய செய்மதி ஒன்று சுற்றுப்பாதையில் மர்மமான முறையில் வெடித்துச் சிதறியது.
அதேநேரம், தொலைத்தொடர்பு செய்மதிகளுடன் இணைத்து அனுப்பப்பட்ட 9-வது “சோதனை செய்மதியின்” உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.

