போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மன்னிப்பில்லை: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார திட்டவட்டம்!
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு எந்தவித மன்னிப்பும் வழங்கப்பட மாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலைக்கு விஜயம் செய்து சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் கைதிகளிடம் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் கிடைப்பதில் நிலவும் தாமதத்தைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 9,081 அறிக்கைகள் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விடுதலைக்குப் பின் மீண்டும் தவறுகளில் ஈடுபடாமல், நாட்டின் உழைக்கும் சக்தியாக மாறி எதிர்காலத்திற்குப் பங்களிக்குமாறு கைதிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
சிறைச்சாலைகளில் அவசர நிலைமைகளைக் கையாள முப்படைகள் மற்றும் பொலிஸாரை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பொறிமுறையொன்றும் அங்கு கலந்துரையாடப்பட்டது.

