அமெரிக்கா–இலங்கை கூட்டு நடவடிக்கையில் பாகிஸ்தான் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு முறியடிப்பு!
பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக சர்வதேச நாடுகளுக்கு கடத்த முயன்ற 463 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளை இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் (PNB) மற்றும் சுங்கப் பிரிவினர் கொழும்பு துறைமுகத்தில் கைப்பற்றியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் 21 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 800 கோடி இலங்கை ரூபாய்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
துண்டுகளுக்குள் மறைத்து விற்கப்படவிருந்த இந்த போதைப்பொருள் கொள்கலன் (Container) குறித்து ஆகஸ்ட் 14 முதல் 29 வரை அமெரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (DEA) மற்றும் பாகிஸ்தானின் சிறப்பு புலனாய்வுக் குழு அளித்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் நாட்டவர்கள் உட்பட பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச குற்றவியல் அமைப்புகளையும் பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் சர்வதேச போதைப்பொருள் கும்பல்களையும் ஒழிப்பதில் அமெரிக்கா மற்றும் இலங்கை கூட்டுப் பங்களிப்பு தொடரும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

