பிரான்ஸை மிரட்டும் காட்டுத்தீ – சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு –
40,000 பேர் அவசரகால படகுகள் மூலம் மீட்பு!
பிரான்ஸில் கோரத் தாண்டவமாடும் காட்டுத்தீ: 40,000 பேர் அவசரகால வெளியேற்றம்; ஐரோப்பிய நாடுகளின் உதவியை நாடிய பாரிஸ்!
பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் உள்ள Gironde மற்றும் Landes மாவட்டங்களை காட்டுத்தீ கடுமையாகப் பற்றி எரித்து வருகிறது.
இதனால் குடியிருப்புகள், முகாம்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களை நோக்கி தீ வேகமாகப் பரவி வருவதால், இதுவரை 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரகரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கோடை விடுமுறையைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் கூடும் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதியான Cap Ferret தீபகற்பம் இந்தத் தீ விபத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் கடற்கரைகள் அடர்ந்த புகையாலும், நெருங்கி வரும் தீப்பிழம்புகளாலும் சூழப்பட்டதை அடுத்து, மக்கள் தங்களின் உடமைகளைத் துறந்துவிட்டு வாகனங்களிலும், Arcachon Bayவழியாகப் படகுகளிலும் தப்பியோடினர்.
இந்த மாபெரும் அவசர நிலையைச் சமாளிக்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிவில் பாதுகாப்பு வழிமுறையை அதிகாரப்பூர்வமாகச் செயற்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் குரோஷியா, போர்ச்சுகல் நாடுகளின் தீயணைப்பு விமானங்களும், செக்கியூ மற்றும் ஸ்வாக்கியா நாடுகளின் Black Hawk ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணிகளுக்காகக் களமிறக்கப்பட்டுள்ளன.
தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்களுக்கு கடும் வெப்பம், உலர் தாவரங்கள் மற்றும் திசைமாறி வீசும் ஆபத்தான காற்று ஆகியவை மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளன.
இருப்பினும், உள்ளூர் விவசாயிகளும் டிராக்டர்கள் மற்றும் நீர் டேங்கர்கள் மூலம் தீயணைப்பு வீரர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த கோடை காலத்தில் பிரான்ஸ் மட்டுமல்லாமல், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் கிரேக்கம் போன்ற பல தெற்கு ஐரோப்பிய நாடுகளும் கடுமையான காட்டுத்தீ விபத்துகளை எதிர்கொண்டுள்ளன.
எல்லைகளைத் தாண்டி பரவும் இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் தற்போது கூட்டாக இணைந்து போராட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகளின் கூட்டு விமான உதவிகள் வந்திருந்தாலும், எதிர்வரும் நாட்களில் நிலவக்கூடிய வறண்ட வானிலை
மற்றும் காற்றின் வேகம் காரணமாகக் காட்டுத்தீயைக் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவருவது கடினம் என்று தீயணைப்புத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வீடுகளையும், விடுமுறைக் கொண்டாட்டங்களையும் இழந்து வெளியேறியுள்ள ஆயிரக்கணக்கான மக்களின் பாதுகாப்பே தற்போது முதன்மையான இலக்காகக் கருதப்படுகின்றது.

