மாத்தறை – திஸ்ஸமஹாராம பிரதான வீதியின் வீரவில பகுதியில் தனியார் பேருந்தொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 19 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராமவிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து, வீரவில பிரதேச செயலகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதுடன், கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்துடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்கள் உடனடி சிகிச்சைக்காக தெபரவெவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் பலத்த காயமடைந்த 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாந்தோட்டை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக வீரவில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

