எ.வ. வேலு மீது வழக்கு.. வரவேற்ற அண்ணாமலை.. விஜய்க்கு அனுப்பிய பெரிய பட்டியல்

கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களைச் செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், தவெக அரசின் வழிகாட்டுதலின்படி, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை நேற்று முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலுக்குத் தொடர்புடைய இல்லங்கள் மற்றும் இதர இடங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சோதனைகளை நடத்தி உள்ளதை வரவேற்கிறேன் என ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், “கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களைச் செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழக அரசின் வழிகாட்டுதலின்படி, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை நேற்று முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்குத் தொடர்புடைய இல்லங்கள் மற்றும் இதர இடங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சோதனைகளை நடத்தி உள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்து ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, தவெக அரசு எடுத்து வரும் இந்த முயற்சிகளை நான் வரவேற்கிறேன். இந்த வழக்குகளில் தவெக அரசு விரைவான முடிவை உறுதி செய்யும் என்றும், குற்றவாளிகள் என நிரூபிக்கப்படுபவர்கள் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

நாம் இந்த விஷயத்தைப் பேசிக் கொண்டிருக்கும் இதே வேளையில், கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்த பின்வரும் ஊழல்கள் குறித்தும் தவெக அரசு கவனம் செலுத்தி, விசாரணைக்கு உத்தரவிட்டு, அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். தொடக்கமாக சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறேன்:

பி.ஜி.ஆர் எனர்ஜி ஊழல்: விதிகளை மீறி, ஒரு ஒப்பந்தத்தை மீண்டும் வழங்கி, பின்னர் அது அம்பலமான பிறகு அதைக் ரத்து செய்தது.

ஊட்டச்சத்து பெட்டகம் ஊழல்: ஆவின் நிறுவனம் அதைத் தயாரிக்க முன்வந்தபோதிலும், தனியார் நிறுவனங்களிடமிருந்து கூடுதல் விலைக்கு ஹெல்த் மிக்ஸ் கொள்முதல் செய்தது.

பொங்கல் வேட்டி ஊழல்: பருத்திக்கு பதிலாகக் கூடுதல் பாலியஸ்டர் பயன்படுத்தியது மற்றும் இதற்கான ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மாநில போக்குவரத்துத் துறையில் நடந்த பலதரப்பட்ட ஊழல்கள்: சாலைகளில் ரிப்ளக்டர் மற்றும் ரியர் மார்க்கிங் பிளேட்ஸ் கொள்முதல் செய்தது மற்றும் இன்னும் பல.

டிஎன்எம்எஸ்சி (தமிழ்நாடு மருத்துவச் சேவைகளின் கழகம்) ஊழல்: பூச்சிக்கொல்லி மருந்துகள் கொள்முதல் செய்தது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ஊழல்.

மேலும், நீண்ட நாட்களாக மர்மமாக நீடிக்கும் ஒரு கேள்விக்குத் தவெக அரசு தீர்வு காணும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

பல ஆண்டுகளாக, திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ரசிகர் மன்றமும், நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனமும் ஒரே முகவரியில் இயங்குவது என்ற விசித்திரமான தற்செயல் நிகழ்வு குறித்தும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் துபாய் பயணத்திற்குப் பிறகு, நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ₹1,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தது குறித்தும் நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம் (அந்த முதலீடு வெறும் அறிவிப்பாகவே நீடிப்பது என்பது வேறு விஷயம்)” இவ்வாறு அண்ணாமலை அந்த பதிவில் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin