தேனியில் வைகை அணை உள்பட 258 நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுப்பது எப்படி? கலெக்டர் விளக்கம்

வைகை அணை உள்பட 258 நீர்நிலைகளில் இலவசமாக மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..

தேனி மாவட்டத்தில் வைகை அணை உள்பட மொத்தம் 258 நீர்நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண்ணும், மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண்ணும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். டிராக்டரில் மட்டுமே இலவசமாக மண் எடுக்க வேண்டும்.

இதற்கு tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேனி கலெக்டர் ஆர்.வைத்திநாதன் அறிவித்துள்ளார்.

தேனி கலெக்டர் ஆர்.வைத்திநாதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், “விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் வண்டல் மண், மண்பாண்ட தொழிலுக்கு தேவையான களிமண் ஆகியவற்றை அரசு புறம்போக்கு நீர்நிலைகளில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக் கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் வண்டல் மண், களிமண் எடுக்க அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகள் குறித்து மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

வைகை அணையில் 6 பகுதிகளில் மண் அள்ள ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பொறுப்பு அலுவலராக உதவி செயற்பொறியாளர் சேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்தில் குளம், கண்மாய் என 93 நீர்நிலைகளில் மண் அள்ளலாம். இதற்கு பொறுப்பு அலுவலராக செயற்பொறியாளர் சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பெரியாறு-வைகை வடிநிலக் கோட்டத்தில் 25 நீர்நிலைகளில் மண் அள்ளலாம். இதற்கான பொறுப்பு அலுவலர்களாக உதவி செயற்பொறியாளர் மல்லிகா, உதவி பொறியாளர்கள் பிரேம்ராஜ்குமார், பாலசேகரன், ராஜாங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 139 நீர்நிலைகளில் மண் அள்ளலாம். அதற்கு பொறுப்பு அலுவலராக ஊராட்சிகள் உதவி இயக்குனர் வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் வைகை அணை உள்பட மொத்தம் 258 நீர்நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண்ணும், மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண்ணும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

டிராக்டரில் மட்டுமே இலவசமாக மண் எடுக்க வேண்டும். இதற்கு tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களின் விண்ணப்பங்களில் இணைக்கப்படும் நிலத்தின் ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் சான்று, விண்ணப்பதாரரின் ஆவணங்கள் ஆகியவற்றை தாசில்தார்கள் பார்வையிட்டு இணையதளம் வாயிலாக உத்தரவு வழங்குவார்கள்.

இதனை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Recommended For You

About the Author: admin