இந்தியர் உள்பட 17 பேரின் கதி என்ன? பாகிஸ்தான் கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தியது எப்படி?
இந்திய பெருங்கடல் பகுதியில் சென்ற பாகிஸ்தானின் கச்சா எண்ணெய் கப்பலை சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
இதில் இந்தியர் உள்பட 17 பேர் சிக்கி உள்ள நிலையில் கடற்கொள்ளையர்கள் எப்படி கடத்தினர்? என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
சோமாலியா நாட்டில் இருந்து தனிபிரதேசமாக செயல்பட்டு வரும் சோமாலிலாந்தின் பெர்பெரா துறைமுகத்தில் இருந்து சோமாலியா தலைநகர் மெகாடிஷூ நோக்கி கச்சா எண்ணெய் கப்பல் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இது பாகிஸ்தானை சேர்ந்த கச்சா எண்ணெய் கப்பலாகும்.
இந்த கப்பல் இந்திய பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்தது. சோமாலியா நாட்டின் கடற்கரை நகரமாக ஹஃப்யூன் (Hafun) மற்றும் பண்டர் பெய்லா (Bandarbeyla) ஆகிய நகரங்களுக்கு இடையே சென்றபோது கடற்கொள்ளையர்களிடம் சிக்கியது. தற்போது அந்த கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
இந்நிலையில் தான் கடத்தப்பட்ட பாகிஸ்தான் கப்பல் பற்றி திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கடற்கொள்ளையர்களால் கடத்தி செல்லப்பட்ட இந்த கப்பலின் பெயர் ஹானர் 25. இந்த எண்ணெய் கப்பல் பிப்ரவரி 20ம் தேதி சோமாலிலாந்தின் (சோமாலியாவில் இருந்து பிரிந்து தனி பிரதேசமாக செயல்படுகிறது) பெர்பெராவிலிருந்து புறப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் சென்றது.
அங்கிருந்து ஏப்ரல் மாத தொடக்கத்தில் மீண்டும் பயணத்தை தொடங்கியது. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சோமாலியாவை சென்றடைந்தது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சோமாலியா தலைநகர் மொகாடிஷூ பகுதியில் 3 மடங்கு வரை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் இந்த கப்பல் கச்சா எண்ணெயை ஏற்றி கொண்டு மொகாடிஷூ நகருக்கு சென்று கொண்டிருந்தது. மொத்தம் 18,500 பேரல் கச்சா எண்ணெய் கப்பலில் இருந்தது.
சிறிய படகில் வந்த 6 பேர் கும்பல் இந்த கப்பலை கடத்தி உள்ளது. அதன்பிறகு கூடுதலாக 5 பேர் கடற்கொள்ளையர்கள் கப்பலில் ஏறி உள்ளனர். கடற்கரையில் இருந்து 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது.
மொத்தம் 17 பணியாளர்கள் இருந்தனர். இதில் 10 பேர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். 4 பேர் இந்தோனேஷியாவை சேர்ந்தவர். ஒருவர் இந்தியாவை சேர்ந்தவர். மற்றொருவர் இலங்கையை சேர்ந்தவர். இன்னொருவர் மியான்மரை சேர்ந்தவர் . இவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை.
இதுபற்றி சோமாலியாவின் புட்லான்ட் பிரதேச அதிகாரிகள் கூறுகையில், ”கடத்தப்பட்ட இந்த கப்பல் சோமாலியாவின் கடற்கரை நகரமான ஹாஃபன் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு பெயர் பெற்ற நகரமாக இருக்கு பந்தர் பெய்லா நகரங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டுள்ளது” என கூறியுள்ளனர். இதனால் இந்த கடத்தல் சம்பவத்தில் பந்தர் பெய்லா (Bander Beyla) அருகே வசிக்கும் கடற்கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் நினைக்கின்றனர்.
இருப்பினும் பெரிய கப்பலை வழிமறித்து எப்படி அதில் ஏறி அவர்கள் கடத்தி சென்றனர்? என்பது தெரியவில்லை. அதுபற்றி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக தற்போது வரை சோமாலியா மற்றும் சோமாலிலாந்து அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் தரப்படவில்லை. தற்போது கப்பல் மற்றும் அதில் உள்ள பணியாளர்களை விரைவாக மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுவாக கடற்கொள்ளையர்கள் கப்பல்களை கடத்தும்போது பெரிய தொகையை கேட்பார்கள். அதனை வழங்கினால் கப்பலையும், பணியாளர்களையும் விட்டு விடுவார்கள். ஆனால் தற்போது வரை கடற்கொள்ளையர்கள் யாரையும் தொடர்பு கெள்ளவில்லை. இது பதற்றத்தை உருவாக்கி உள்ளதோடு, கப்பலில் உள்ள 17 பணியாளர்களின் கதி என்ன? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

