குடியரசுத் தலைவர் தேர்தல்: வெளிநாட்டுத் தலையீடுகளைத் தடுக்கப் புதிய சட்டம் – பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் அறிவிப்பு!
அடுத்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் புதிய அரசுத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகளில் வெளிநாடுகள் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்படும் என அரசுத்தலைவர் இம்மானுவேல் மேக்ரான் இன்று (ஏப்ரல் 16, 2026) அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற நூற்றுக்கணக்கான நகர மன்றத் தலைவர்கள் மத்தியில், பாரிஸில் உள்ள அதிபர் மாளிகையில் உரையாற்றியபோது அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களிலும் இந்த வெளிநாட்டுத் தலையீடுகள் இருந்திருக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய மேக்ரான், ஜெர்மனி, ருமேனியா, மால்டோவா போன்ற அண்டை நாடுகளின் தேர்தல்களிலும் இதன் தாக்கம் கடுமையாக இருந்ததாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, தேர்தல் காலங்களில் “லட்சக்கணக்கான போலி சமூக வலைத்தளக் கணக்குகளை பெருமளவில் விலைக்கு வாங்கி” மக்கள் மத்தியில் தவறான தகவல்களைப் பரப்பும் செயல்களில் வெளிநாடுகள் ஈடுபடுவதாக அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
இத்தகைய போலி கணக்குகளைத் தடை செய்யும் நடவடிக்கையைப் பிரான்ஸ் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த ஐரோப்பிய அளவிலும் முன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். “போலி கணக்குகளைத் தடை செய்த முதல் நிலப்பரப்பாக ஐரோப்பா மாற வேண்டும்; அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என அவர் வலியுறுத்தினார்.
ஜனநாயக ரீதியிலான பொது விவாதங்களைச் சமூக வலைத்தளங்களின் தீய பிடியிலிருந்து பாதுகாக்க, புதிய சட்டம் மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அரசாங்கம் விரைவில் தாக்கல் செய்யும். குறிப்பாக, தேர்தல் காலங்களில் பணம் கொடுத்துக் கருத்துக்களைப் பரப்பும் முறையைக் கடுமையாகக் கட்டுப்படுத்தப் பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.

