அமெரிக்காவுக்குள் ஊடுருவிய மர்ம ட்ரோன்கள்! முக்கிய தலைவர்களின் இல்லங்களுக்கு மேல் வட்டமிட்டதால் பரபரப்பு
வோஷிங்டனில் உள்ள போர்ட் மெக்நாயர் (Fort McNair) இராணுவத் தள வளாகத்தில் அமைந்துள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு மேலாகச் சுமார் 20 மர்ம ட்ரோன்கள் கூட்டமாகப் பறந்துள்ளன.
கடந்த 10 நாட்களில் ஒரு இரவு பொழுதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், இது தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட உளவு நடவடிக்கையா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து எப்.பி.ஐ (FBI) மற்றும் பென்டகன் உயர்மட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
வர்ஜீனியாவின் லாங்லி (Langley) விமானப்படைத் தளம் உள்ளிட்ட முக்கிய இராணுவ மையங்களிலும் இவ்வாறான மர்ம ட்ரோன்கள் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வட்டமிட்டு வருகின்றன.
ஈரானுடனான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், இந்த ட்ரோன்கள் ஈரானால் ஏவப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஈரானில் உள்ள சுமார் 7,000 இலக்குகள் மீது அமெரிக்கா ஏற்கனவே தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதற்குப் பதிலடியாக அமெரிக்காவிற்குள்ளேயே இவ்வாறான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவது அந்நாட்டுப் பாதுகாப்புத் தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

