மன்னாரில் பூஞ்சணம் பிடித்த ஆயிரக்கணக்கான தொன் சோள விதைகள் மீட்பு!
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பகுதியில் வீதி மற்றும் தனியார் காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி ஆயிரக்கணக்கான தொன் சோள விதைகள் உலர விடப்பட்டுக் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்தன.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த புகாரின் அடிப்படையில், மன்னார் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட அதிரடி ஆய்வின் போது, அந்தச் சோள விதைகள் மனித நுகர்வுக்குத் தகுதியற்றவை என்பதும், அவை பூஞ்சணம் பிடித்துத் தரம் குறைந்த நிலையில் இருந்ததும் கண்டறியப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், இந்தக் களஞ்சிய சாலைக்கோ அல்லது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கோ எவ்வித சுகாதாரச் சான்றிதழோ, சட்டப்பூர்வ அனுமதியோ பெறப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இவ்வளவு பெரிய அளவிலான பழுதடைந்த சோள விதைகள் மாவட்டத்திற்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது குறித்தும், தரமற்ற சத்துணவுப் பொருட்கள் தயாரிக்க இவை பயன்படுத்தப்படவிருந்ததா என்பது குறித்தும் சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விலங்கு உணவாகப் பயன்படுத்துவதற்குக் கூடத் தகுதியற்ற இந்த விதைகளை, நீதிமன்ற அனுமதியுடன் முழுமையாக அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

