ஜனாதிபதி நிகழ்வுகளுக்கு மக்களை அழைத்து வர ரூ. 25 இலட்சத்திற்கும் அதிக நிதி செலவு :
யாழ்ப்பாணத்திற்கு கடந்த ஜனவரி மாதம் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொண்ட இரு வேறு நிகழ்வுகளுக்காக, பொதுமக்களை அழைத்து வர சுமார் 25 இலட்சத்து 66 ஆயிரத்து 885 ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 16ஆம் திகதி மீசாலையில் நடைபெற்ற “மீள்குடியேற்ற வீடமைப்பு திட்ட உதவி வழங்கும் நிகழ்வுக்காக” 11 தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. இதற்காக 2 இலட்சத்து 23 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
அதே நாளில் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற “முழு நாடும் ஒன்றாக” போதை ஒழிப்பு நிகழ்விற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 75 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டன.
இந்தச் சேவைக்காக மட்டும் 23 இலட்சத்து 43 ஆயிரத்து 885 ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

