வாழைச்சேனையில் போலி வைத்தியர் கைது
மட்டக்களப்பு, வாழைச்சேனை பகுதியில் போலி வைத்தியராக நடித்து வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தான் ஒரு வைத்தியர் என மக்களை நம்ப வைத்து, போலியாகச் செயற்பட்டு வந்த 33 வயதுடைய இளைஞர் ஒருவரையே வாழைச்சேனை காவல்துறையினர் நேற்று (ஜனவரி 22) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்தவர். இவர் க.பொ.த (உயர்தரம்) விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றவர் எனத் தெரியவந்துள்ளது.
தனது தனிப்பட்ட தேவை ஒன்றிற்காக (தனிப்பட்ட விடயங்களைச் சாதிப்பதற்காக) வைத்தியர் எனப் பல இடங்களிலும் நடித்து வந்துள்ளார்.
இவரின் நடவடிக்கைகள் குறித்து எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
தற்போது வாழைச்சேனை காவல்துறையினா் இந்த இளைஞர் ஏதேனும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கினாரா அல்லது வேறு மோசடிகளில் ஈடுபட்டாரா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

