ஆடு பயிரை மேயவில்லை, வேலியே பயிரை மேய்ந்தது: அக்கரைப்பற்று பொலிஸில் சம்பவம்!

பொலிஸ் நிலைய குளிரூட்டியில்பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பம் தொடர்பில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு அட்டாளைச்சேனை பகுதி வீடு ஒன்றில் அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விலங்குகள் அறுக்கும் தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 4 ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை பொலிசார் கைது செய்திருந்தனர்.

பின்னர் குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். அவரது சார்பில் தோன்றிய சட்டத்தரணி தனது குறித்த ஆட்டை தனது வீட்டு நிகழ்வு ஒன்றுக்கு அறுத்ததாகவும் குற்றத்தை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

இதனைநடுத்து குறித்த வழக்கின் சான்றுப் பொருளான ஆட்டிறைச்சி பொலிஸ் நிலையத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு குறித்த சான்றுப் பொருளை பார்வையிட நீதிவான் சென்றபோது ஆட்டிறைச்சியை மூடையில் கட்டி பெக்கோ இயந்திரம் மூலம் புதைப்பதற்கு தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.

குறித்த சான்றுப் பொருள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கூறிய பொலிஸார் திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை நீதிவானுக்கு ஏற்படுத்தியது.

இதனையடுத்து நீதிவான் பெக்கோவில் இருந்த ஆட்டிறைச்சி மூடையைப் பிரிக்குமாறு பணித்திருந்தார். அதன்போது குறித்த ஆட்டின் பின்னங்கால் மற்றும் சதைகள் காணப்படவில்லை.

இது தொடர்பில் வினவியபோது ஆட்டிறைச்சியை சில பொலிஸார் எடுத்துச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் ஏ.சி.றிஸ்வான் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கடந்த வெள்ளிக் கிழமையன்று விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதனடிப்படையில் ஆட்டிறைச்சியைக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கு எதிராக அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை மேற்கொண்டு அதனடிப்படையில் குறித்த ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடி இடமாற்றம் வழங்கபட்டுள்ளது.

இதன் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பொலிஸ் நிலையத்துக்கும் ஏனைய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நிந்தவூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Recommended For You

About the Author: admin