விரக்தியால் நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்

இலங்கையில் காணப்படும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் 25 இலட்சத்து 65 ஆயிரத்து 365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.

அதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டு 11 இலட்சத்து 27 ஆயிரத்து 758 பேர் மற்றும் கடந்த 2023ஆம் ஆண்டு 14 இலட்சத்து 37 ஆயிரத்து 607 பேர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இவர்களில் வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 8 ஆயிரத்து 925 பேர் ஆவர்.

இது வெளிநாடு சென்ற மொத்த எண்ணிக்கையில் 24 வீதமாகும்.

கடந்த 2022ஆம் ஆண்டில் 3 இலட்சத்து 11 ஆயிரத்து 269 பேர் மற்றும் கடந்த 2023ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 97 ஆயிரத்து 656 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக சென்றுள்ளனர்.

2023ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியவர்களில் சுமார் 70 வீதமானவர்களுள் தொழில் ரீதியாக உயர் தகைமை பெற்ற பொறியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள் போன்றவர்களும் உள்ளடங்குவதாக தெரிவித்த பேராசிரியர், கடந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்குச் சென்றவர்களில் 34 வீதமானவர்கள் 25-34 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளிநாடு சென்றவர்களில் 55 வீதமானோர் ஆண்கள், 45 வீதமானோர் பெண்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வருடங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 18 இலட்சத்து 20 ஆயிரத்து 479 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி மற்றும் விரக்தியின் காரணமாக இவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin