யாழ் நகரில் இருந்து கொழும்புக்கு வந்தவர் கடத்தப்பட்டு கொள்ளை

யாழ்ப்பாணத்தில் இருந்து தனது மனைவியுடன் கொழும்புக்குச் சிகிச்சைக்காக வருகைதந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கடத்தப்பட்டு கைவிரலில் போடப்பட்டிருந்த இருந்த தங்க மோதிரம் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர் வேறு யாருமல்ல.

கொழும்பில் இருந்து வெளிவரும் தினக்குரல் நாளிதழில் ஒப்புநோக்குநராகப் பணியாற்றிப் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஊடக வகுப்புகளை நடத்திய சோமு குணசீலன் என்பவரே.

யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறைப்பட்டதாரியான இவருடைய மனைவி யாழ்ப்பாணம் பிரதேசம் ஒன்றில் கிராம சேவகராகக் கடமையாற்றுகிறார்.

இத்தகைய பின்புலம் உள்ள ஒருவரே கொழும்பில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டுக் கடத்தப்பட்டு பணம் நகைகளை இழந்திருக்கிறார்.

வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவத்தில் தனக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தைக் குணசீலன் ஒருவன் செய்திச் சேவைக்கு விபரித்தார்.

அவை வருமாறு

யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு மனைவியுடன் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு கொழும்பை வந்தடைந்தேன்.

மனைவியை பம்ப்பிட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தேன். பின்னர் அலுவல் ஒன்றுக்காக அன்று பிற்பகல் கோட்டைக்கு வந்தேன்.

அங்கு எனது அலுவல்களை முடித்துப் பின்னர் புதிய ஆடைகளையும் கொள்வனவு செய்து கொண்டு மீண்டும் மனைவியிடம் செல்வதற்கு மாலை 6.45 அளவில் தயாரானேன்.

அப்போது கோட்டை போஹாவச் சந்தியில் ஓட்டோவில் வந்த ஒருவர் என்னை எங்கு போகப் போகிறீர்கள் என்று கொச்சைத் தமிழில் கேட்டார். பம்பலப்பிட்டிக்குச் செல்ல வேண்டும் என நானும் கூறினேன்.

பதிலுக்கு அந்த ஓட்டோக்காரரும் ‘வாருங்கள் நான் பாணந்துறைக்குதான் போகின்றேன். வழியில் பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுகின்றேன் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் தரலாம்’ என்று சொன்னார்.

நானும் நம்பிக்கையாக அவருடைய ஓட்டோவில் ஏறிப் பயணம் செய்தேன்.

அங்கிருந்து மருதானை வரும் வரையும் என்னுடன் மிக நட்பாக உரையாடினார். மருதானைச் சந்தியில் உள்ள மதுபானக் கடை ஒன்றில் நிறுத்திவிட்டுக் ‘கொஞ்சம் இருங்கள் பியர் வேண்டி வருகின்றேன்’ எனக் கூறிவிட்டுச் சென்றவர் சில நிமிடங்களில் பியர் போத்துல் ஒன்றுடன் வந்தார்.

அதற்கிடையில் மேலும் ஒருவர் அங்கு வந்து அந்த ஓட்டோக்காரருடன் மிக நட்பாக உரையாடிவிட்டு அருகில் நின்றார்.

ஓட்டோக்குள் வைத்து பியர் போத்தலை உடைத்து கொஞ்சம் குடியுங்கள் என்று என்னை அந்த ஓட்டோக்காரர் கேட்டார்.

எனக்கு சந்தேகம் வந்தது

ஆனால் நான் அதற்கு மறுத்தேன். எனது மனைவி வைத்தியசாலையில் உள்ளார். நான் அங்கு போக வேண்டும். என்னை பம்பலப்பிட்டியில் இறக்கிவிடுங்கள் என மிகவும் தாழ்மையாக அவரிடம் வேண்டினேன். அப்போது அவருடைய பதில் என்னை கொஞ்சம் அதட்டியது.

இதனால் எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவரிடம் இருந்து என்னால் தப்ப முடியாது என்பதையும் நான் அப்போது உணர்ந்து கொண்டேன்.

ஏனெனில் ஓட்டோவைச் சுற்றி இருவர் அங்கு நின்றதைக் கண்ணுற்றேன்.

அந்த இருவரும் அவருடைய அடியாட்களாகவே இருக்கும் என்று கருதி நான் அந்த ஓட்டோக்காரரை எதிர்க்க விரும்பவில்லை.

முடிந்தவரை அவருடன் சமரசம் செய்து அங்கிருந்து விடுபட முயற்சித்தேன். மனைவி வைத்தியசாலையில் என்று கூறி மிகவும் இரந்து கேட்டேன்.

ஆனாலும் அவர் என்னை விடுவதாக இல்லை. அவரிடம் இரக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை.

பானத்தை பலாத்காரமாகப் பருக்கினார்

கண் இமைக்கும் நேரத்தில் அவர் எனது கழுத்தைப் பிடித்து ஒரு சிறுதுளி பாணத்தைப் பருக்கினார்.

அதன் பின்னர் ஓட்டோவை அவர் பொரள்ளையை நோக்கிச் செலுத்தினார்.

பொரள்ளை வரையும் எனக்கு சற்று மயக்கமாக இருந்தது. அதன் பின்னர் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்றார்.

இச் சம்பவம் தொடர்பாக அவருடைய மனைவி தெரிவிக்கையில்–

இரவு எட்டு மணியளவில் வந்துவிடுவேன் என்று கூறிச் சென்ற எனது கணவர் இரவு பத்து மணியாகியும் வரவில்லை. தொலைபேசி அழைப்பை எடுத்தாலும் அதற்கும் பதில் இல்லை.

கணவர் ஒருபோதும் எனது தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்காமல் இருக்கமாட்டார். அதுவும் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர் நிச்சயமாக குறித்த நேரத்துக்கு வந்திருக்க வேண்டும்.

ஆகவே அவருக்கு ஏதோ நடந்து விட்டது என்ற அச்சத்துடன் நான் அனுமதிக்கப்பட்டிருந்த பம்பலப்பிட்டி மருத்துவமனை நிர்வாகத்திற்குத் தெரிவித்திருந்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கொழும்பில் உள்ள எனக்குத் தெரிந்த சில நண்பர்களிடம் உதவி கேட்டேன். நள்ளிரவு என்பதால் பலரும் தயங்கினர்.

ஏரிஎம்மில் பணம் எடுக்கப்பட்டது

பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதென்றாலும் என்னால் மருத்துவ மனையை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

அப்படியிருந்தும் இரவிரவாக விழித்திருந்து எனக்குத் தெரிந்த சிலருடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தேன்.

சனிக்கிழமை அதிகாலை மூன்று மணியளவில் கட்டுநாயக்காவில் உள்ள பணம் எடுக்கும் தானியக்க இயந்திர (ATM) நிலையத்தில் இருந்து ஒரு இலட்சம் ரூபா பணமும், பின்னர் இரண்டு தடவைகள் ஐயாயிரம் ரூபாவும் அடுத்தடுத்து எடுக்கப்பட்டமைக்கான குறுஞ் செய்தி எனது தொலைபேசிக்கு வந்தது.

இதனால் எனது கணவருக்கு ஏதோ ஆபத்து நடந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டேன்.

உடனடியாக வங்கியுடன் தொடர்பு கொண்டு எனது வங்கி அட்டையின் இலக்கத்தைத் துண்டித்தேன்.

தொலைபேசி துண்டிக்கப்பட்டது

உடனடியாகச் சனிக்கிழமை அதிகாலையே நன்கு தெரிந்த ஒருவருடன் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாட்டையும் பதிவு செய்தேன்.

கணவரின் தொலைபேசி இலக்கத்தைக் கொண்டு கூகுல் வரைபடத்தைப் பெற்ற பொலிஸார் கோட்டை போஹா சந்தியில் இருந்து மருதானை பொரள்ளையூடாக கட்டுநாயக்கா மீரிகானைக்குச் சென்றிருப்பதாகக் கூறினர்.

மீரிகானையுடன் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் 10.30க்கு நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் இருந்து தாதியொருவரின் கையடக்கத் தொலைபேசி மூலம் கணவர் என்னுடன் தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்ட ஆபத்து குறித்து விளக்கினார்.

அதனையடுத்து வைத்தியாசலைக்குச் சென்று கணவரைப் பார்வையிட்டேன்.பொலிஸாரும் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டதாக மனைவி தெரிவித்தார்.

மயக்கமான நிலையில் சனிக்கிழமை அதிகாலை கம்பஹா மாவட்டம் திவுலுப்பிட்டிய பகுதியில உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் வாகனம் ஒன்றில் இருந்து தான் இறக்கிவிடப்பட்டு வீதி ஓரமாக விழுந்து கிடந்தததாகவும் குணசிலன் தெரிவித்தார்.

பொலிஸார் எச்சரிக்கை

பின்னர் அம்பூலன்ஸில் தான் ஏற்றப்பட்டதைச் சற்று உணர்ந்ததாகவும் அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை பகல் வரை தான் எங்கு இருக்கிறேன் எனத் தனக்குத் தெரியவில்லை என்றும் அவர் தனது துயரத்தை மேலும் விபரித்தார்.

அத்துடன் தனது கையில் இருந்த இரண்டு தங்க மோதிரங்கள், கை மணிக்கூடு, கைப் பையில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம், ஐம்பது ஸ்ரேலிங் பவுண்ஸ் மற்றும் கொள்வனவு செய்யப்பட்ட பெறுமதியான புதிய ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டதை தெரிந்து கொண்டேன் என்பதையும் வேதனையுடன் விபரித்தார்.

ஏரிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை மனைவி கூறிய பின்னரே அறிந்து கொண்டதாகவும், கடவுச் சொல்லை எப்படி பெற்றார்கள் என்று தனக்கு புரியவில்லை என்றும் விபரித்தார்.

மொத்தமாக சுமார் ஏழு இலட்சம் ரூபாவரை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை கொழும்பில் மிகச் சமீபகாலமாக இவ்வாறான கடத்தல் சம்பங்கள் இடம்பெறுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடருகின்றன. கொழும்புக்கு வரும் மக்களை மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: admin