ஜீவன் ஒரு பொய்யர் : மனோ கணேசன் கடும் கோபம்

இந்திய வீடமைப்புத் திட்டத்தை நான் வாழ்த்தி வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தேன் ஆனால், மகோகணேசன் கூறுவதை கேட்டால் பிள்ளையாரும் அழுவார் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார். அவர் ஒரு பொய்யர் என்பது இதன்மூலம் தெரிகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

”பொய் பித்தலாட்டம் பேசும் அமைச்சரின் நடத்தையை கண்டு ஆறுமுகன் தொண்டமானின் ஆன்மாதான் அழுகிறது.

2014ஆம் ஆண்டு 4ஆயிரம் வீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 2019 வரை நான்காயிரம் வீட்டுத்திட்டத்தைதான் நாம் முன்னெடுத்தோம்.

அரசாங்கம் தோல்வியடைந்ததால் அதனை எம்மால் செய்ய முடியவில்லை. 2019 இல் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால், 5 வருடங்களின் பின்னர்தான் வீட்டுத்திட்டத்தை அறிவிக்கின்றனர். தேர்தல் ஆண்டாக உள்ளதால் பித்தலாட்டம் செய்கின்றனர்.

40 வருடங்களாக அமைச்சர்களாக இருந்தனர். ஆனால், நாம் 4 வருடத்தில் செய்த வேலைகளைக் கூட செய்யவில்லை. 2010ஆம் ஆண்டு கோரிய வீட்டுத்திட்டத்தைக்கூட 2014இல் நாம் வந்துதான் ஆரம்பித்துவைத்தோம்.

யாருக்கு மண் ஒப்பந்தம், யாருக்கு வீட்டு ஒப்பந்தம் என்ற பேரம்தான் இடம்பெற்றது. அதனால்தான் ஆரம்பிக்கவில்லை. 10ஆயிரம் வீட்டுத்திட்டத்தைக்கூட இப்போதுதான் ஆரம்பிக்கின்றனர்.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் ஆகிய இரண்டு ஜனாதிபதிகளுடனும் பேசி பேசியே காலத்தை கடத்துகின்றனர்.

நாம் 200 நிகழ்வுக்கு எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், நாகரீகமான முறையில் அந்த நிகழ்வுக்கு வாழ்த்துகளை கூறினேன். அத்துடன் நான் வராத காரணத்தையும் கூறினேன். எனக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆகவே, அவர் ஒரு பொய்யர்.”என்றார்.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை அமைச்சர் ஜீவன் தொண்டமான் பாரத் லங்கா வீட்டுத்திட்டம் தொடர்பாக உரையாற்றிய போது, மகோகணேசன் கூறுவதை கேட்டால் பிள்ளையாரும் அழுவார் என விமர்சித்திருந்தார்.

ஜீவன் தொண்டமானின் உரையின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இடையில் குறுக்கீடுகளை மேற்கொண்டிருந்தார். இதனால் இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும் போதே மனோகணேசன் இவ்வாறு கூறினார்.

Recommended For You

About the Author: admin