முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புத்தகக் கண்காட்சி

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் புத்தக் கண்காட்சி நிகழ்வானது இன்றைய தினம் 26.10.2023 முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப் புத்தகக் கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து புத்தகங்களை பார்வையிட்டதுடன் விற்பனைக்காக வைக்கப்பட்ட புத்தகங்களையும் வாங்கி சென்றனர்.

புத்தகக் கண்காட்சியில் பங்குபற்றிய 50 பாடசாலை நூலகங்களிற்கு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. இக் கண்காட்சியானது நாளைய தினமும் (27) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அ. உமாமகேஸ்வரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட உள்ளக கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள்,உதவி மாவட்டச் செயலாளர், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: S.R.KARAN