செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் சோகம் – மேலும் 7 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு!
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 23ஆம் நாள் பணிகள், நீதிமன்ற மேற்பார்வையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (12.06.26) தீவிரமாக நடைபெற்றன.
இதன்போது, புதிதாக அடையாளம் காணப்பட்ட 12 மனித என்புக்கூடுகளில், ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழி தளத்தில் இதுவரை மொத்தம் 353 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 334 என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னணித் தகவல்:
கடந்த 2025 பெப்ரவரி மாதம் கட்டுமானப் பணிகளின் போது தற்செயலாக வெளிப்பட்ட இந்த மனித எச்சங்கள் குறித்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றக் கட்டளையின் கீழ், காவற்துறைப் பாதுகாப்புடன் அகழ்வாராய்ச்சிகள் ஆரம்பமாகின.
சர்வதேச அவதானிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெறும் இந்த அகழ்வுகளின் போது, கைக்குழந்தைகளின் உடைகள், விளையாடும் பொம்மைகள் மற்றும் சிறுவர்களின் பாடசாலைப் பைகள் போன்ற அதிர்ச்சியூட்டும் சான்றுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலப் போர்க்காலக் காணாமல் ஆக்கப்படுதல்களின் முக்கிய சாட்சியாகப் பார்க்கப்படும் இப்புதைகுழி விவகாரம், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தரும் ஒரு முக்கிய திருப்புமுனையாக மாறியுள்ளது.

