புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தினால் கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் மேச்சல் தரை காணியை விடுவிக்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்றைய தினம் 26-10-2023 முன்னெடுக்கப்பட்டது.

பல்வேறு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எழுத்து மூலமும் நேரடியாகவும் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும் பயனற்று போனதன் காரணத்தால் குறித்த போராட்டம் இன்றைய தினம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ( மெசிடோ )அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டிருந்த குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மெசிடோ நிறுவனத்தின் தலைவர்,நானாட்டான் – முசலி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மத தலைவர்கள் என பலரும் குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்ததாவது ஒவ்வொரு வருடமும் மாந்தை மேற்கு, இலுப்பை கடவை பகுதிக்கு எமது கால்நடைகளை கொண்டு சென்று பல்வேறு விதமான துன்ப துயரங்களையும் கால்நடை இழப்புக்களையும், மனித இழப்புக்களையும் சந்திக்க நேருவதுடன் பாரிய பொருளாதார இழப்புக்களையும் சந்திக்கின்றோம், மேலும் அப்பகுதியில் உள்ளவர்களுடன் எமக்கு முரண்பாடுகளும் ஏற்படுகின்றன.

ஆகவே, எமது கட்டுக்கரைக்குளத்திற்குட்பட்ட புல்லறுத்தான் கண்டல் பகுதியை மேச்சல் நிலமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பலவருடமாக கோரிக்கை விடுத்ததன் பிரகாரம் பலமுறை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் நடைமுறைச்சாத்தியமாக்கவில்லை கடந்த 12-10-2023 அன்று வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என்பதே வேதனைக்குரிய விடயம் மேச்சல் தரவை நிலம் ஒதுக்குவது தொடர்பான விடயத்தில் அதிகாரிகள் மிகவும் அலட்சியமாக நடந்துகொள்கின்றார்கள் என்பதை வெளிப்படையாகவே புலனாகின்றது, எனவே உடனடியாக எமக்குரிய மேச்சல் நிலத்தை விடுவித்து தருமாறு குறிப்பிட்டு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளரிடம் மகஜர் வாசித்து கையளிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: S.R.KARAN