வட மாகாணத்தில் பல அதிகாரிகளுக்கு இடமாற்றம்

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பிரதேச செயலர்கள், மேலதிக மாவட்டச் செயலர்கள் உட்படப் பலருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்டுள்ள இடமாற்றப் பட்டியலின்படி, சங்கானை பிரதேச செயலர் பி.பிரேமினி கிழக்கு மாகாண சபைக்கும், கிழக்கு மாகாண சபையில் பணியாற்றும் கே.உதயகுமார் சங்கானை பிரதேச செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகன், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராகவும், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சபைக்கும் இடமாற்றம்
வடக்கு மாகாண சபையில் பணியாற்றும் ந.இன்பராஜ் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கும், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் ந.திருலிங்கநாதன் வடக்கு மாகாண சபைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராகப் பணியாற்றும் சி.கிருஷ்நேந்திரன் வடக்கு மாகாண சபைக்கும், யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இடமாற்றம்
திருகோணமலை நகரப் பிரதேச செயலர் பி.தனேஸ்வரன் ஊர்காவற்றுறை பிரதேச செயலராகவும், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் எஸ்.மஞ்சுளாதேவி திருகோணமலை நகரப் பிரதேச செயலராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

கரைச்சிப் பிரதேச செயலர் பி.ஜெயகரன் வடக்கு மாகாண சபைக்கும், வடக்கு மாகாண சபையில் பணியாற்றும் பற்றிக் டிறைஞன், கரைச்சிப் பிரதேச செயலராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor