வீட்டுத்திட்ட இறுதிப் பட்டியலை காட்சிப்படுத்த கோரும் அமைச்சர் டக்ளஸ்

யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்காக 600 வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுவதாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் (காணி) தெரிவித்த நிலையில் இறுதிப் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் (04.05.2023) அபிவிருத்தி கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட விடயதானங்கள் தொடர்பிலும், வீட்டுத் திட்டம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்ட போதே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மேலதிக அரச அதிபர் முரளிதரன் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தில் 10 இலட்சம் ரூபா வீட்டு திட்டங்கள் 379ம், ஆறு இலட்சம் ரூபாய் வீட்டு திட்டங்கள் 221ம் வழங்கப்படவுள்ளன.

இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படாத நிலையில் செயற்பாடுகள் முன்னெடுப்பு
யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலர் பிரிவிலும் முன்னுரிமைப்படுத்தப்பட்ட அதாவது நலன்புரி நிலையங்களில் இருந்தோர், விசேட தேவையுடையவர்கள், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்கள் ஆகியவை முன்னுரிமைப்படுத்தப்படுகின்றன.

எனினும் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படாத நிலையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டதும் அதனை உரிய இடங்களில் காட்சிப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor