பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன்

பாணந்துறை கடற்கரைப் பகுதியில் நீல வண்ண ஜெல்லிமீன் (Physalia – blue bottle jellyfish) எனப்படும் நச்சு உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தேசிய நீர்வள திணைக்களம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதுடன், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.

 

கடற்கரைப் பகுதியில் ஜெல்லிமீன்களின் வரத்து அதிகரித்துள்ளதாகப் பாணந்துறை நகராட்சி மன்றத்திடமிருந்து வந்த தகவலை அடுத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

 

நிலைமையை நேரில் ஆய்வு செய்யவும், ஜெல்லிமீன் இனத்தை அடையாளம் காணவும், பொதுமக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை மதிப்பிடவும் தேசிய நீர்வள திணைக்கள அதிகாரிகள் பாணந்துறை கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டனர்.

 

பாணந்துறை கடற்கரை முழுவதும் நீல வண்ண ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக, பாணந்துறை கடற்கரையில் நீச்சலில் ஈடுபட்ட பல சுற்றுலாப் பயணிகள் ஜெல்லிமீன் கொட்டுக்கு உள்ளாகினர் என்று முறையிடப்பட்டிருந்தது.

 

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

 

நீல வண்ண ஜெல்லிமீன்களின் கொட்டு கடுமையான வலி தரக்கூடியது என்பதாகவும், சில சந்தர்ப்பங்களில் கடுமையான வலி, ஒவ்வாமை மற்றும் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin