கடையை உடைத்து கொள்ளை!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை பிரதேசத்திலுள்ள பலசரக்கு கடை ஒன்றின் கூரையை உடைத்து , அங்கிருந்த 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பணம் மற்றும் இரண்டு பன்டல் சிகரெட் என்பவற்றை திருடிச் சென்ற சந்தேகநபரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ரிதிதென்னையில் வைத்து சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை காலை கடையை திறந்த போது கடையின் கூரையை உடைத்து பணம் மற்றும் சிகரெட் என்பன திருடப்பட்டுள்ளதை கண்ட கடை உரிமையாளர் அது தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பொருத்தியுள்ள சிசிரி கமராவை சோதனையிட்டனர்.

அதில் முகத்தை உரப் பையால் மூடியவாறு கொள்ளையன் கொள்ளையிட்டுள்ளது தெரியவந்த நிலையில் தொடர் விசாரணையில் குறித்த கொள்ளையனை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கொள்ளையன் ரிதிதென்னை ஜெயந்தியால பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் ஏற்கனவே மடிகணணி, மற்றும் பல கொள்ளை சம்பவங்களில் தொடர்புபட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கைதான சந்தேகநபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Recommended For You

About the Author: webeditor