ஹப்புத்தளை தம்பேதென்ன அனர்த்த நிவாரண வீட்டுவசதித் திட்டம் மீண்டும் ஆரம்பம்!
ஹப்புத்தளை, தம்பேதென்ன கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட மாவூஸ்ஸாகொல்ல பகுதியில் 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு முடங்கிக் கிடந்த அனர்த்த நிவாரண வீட்டுவசதித் திட்டத்தின் பணிகளை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிலச்சரிவு அபாயம் நிறைந்த மாவூஸ்ஸாகொல்ல தோட்டப் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பான வீடுகளை வழங்கும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
முதற்கட்டமாக 65 வீடுகள் அமைக்கத் திட்டமிடப்பட்ட போதிலும், இதுவரை பணிகள் நிறைவடையவில்லை.
இப்பணிகளை பார்வையிடுவதற்காக பதுளை மாவட்ட செயலாளர் சுனில் கலபம தலைமையில் நேற்று (12) கண்காணிப்பு விஜயமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இத்திட்டத்தை விரைந்து முடிக்க இராணுவ பொறியியல் சேவைப் படையணியின் ஒத்துழைப்பைப் பெற எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த மாவட்ட செயலாளர், நீர், மின்சாரம் மற்றும் வீதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

