நெல் கொள்வனவிற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலும் ரூ.2,500 மில்லியன் – அமைச்சரவை அனுமதி
2026 சிறு போக நெல் கொள்முதல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலதிகமாக ரூ. 2,500 மில்லியன் நிதியை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
2026 சிறு போகத்திற்கான நெல் கொள்வனவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 6,000 மில்லியன் ரூபா ஏற்கனவே நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டு, தற்போது நெல் கொள்வனவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருப்பினும், அனுராதபுரம், பொலன்னறுவை, புத்தளம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், மஹாவலி B, C மற்றும் H வலயங்களிலும் நெல் அறுவடை பணிகள் இன்னும் நிறைவடையாததால், அப்பகுதிகளில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமானதாக இல்லை என அவதானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026 சிறு போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் உடனடித் திட்டத்தை முன்னெடுப்பதற்காக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள 7,500 மில்லியன் ரூபா மேலதிக நிதியிலிருந்து, மீளளிப்பு அடிப்படையில் (Reimbursement basis) மேலும் 2,500 மில்லியன் ரூபாவை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்குவதற்காக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

