இலவசக் கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பை பாதுகாக்க அரசுக்கெதிராக மருத்துவ மாணவர்கள் போராட்டம்

இலங்கையில் இலவசக் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக ருஹூனு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் குழு முன்னெடுத்த மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டம் நேற்று காராபிட்டிய பகுதியில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மருத்துவக் கல்வியைத் தனியார்மயமாக்கும் அரசின் தற்போதைய கொள்கைகளுக்கு மாணவர்கள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

நாட்டின் நீண்டகால பாரம்பரியமிக்க இலவசச் சேவை முறைகளை சீர்குலைக்கும் வகையில் புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் தகுதியான மருத்துவப் பயிற்சிகளை உறுதிப்படுத்தவும், பொதுமக்களுக்கான சுகாதாரச் சேவைகளைப் பாதுகாக்கவும் அரசு உடனடியாக முறையான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்கள் இப்போராட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

தரம் மற்றும் முறையான தகுதி விதிமுறைகளைப் பின்பற்றாத தனியார் கல்வி நிறுவனங்கள் நாட்டின் மருத்துவத் துறையின் ஒட்டுமொத்தத் தரத்தையே வீழ்த்திவிடும் என எச்சரித்த மருத்துவ மாணவர்கள், இலவசக் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையிலான திட்டங்களை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.

Recommended For You

About the Author: admin